சென்னை, நவ.25
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. அது ேநற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது. அதன்பிறகு, புயலாகவும் உருமாறும். அதேநேரத்தில், இலங்கை அருகே நேற்று இன்னொரு புயல் சின்னமும் தோன்றுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் தொடர்ந்து மழை பெய்யும். நேற்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 12 முதல் 20 செ.மீ. வரை கனமழை பெய்யும். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் ஒருவர் இறந்தார். இதனால் தமிழகத்தில் 2 நாளில் மழை சாவு 4–ஆக அதிகரித்துள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் 16 –ஆம் தேதி தொடங்கியது. அதன்பிறகு, ஒரு மாதத்திற்கும் மேலாகி விட்டது. இந்த காலக்கட்டத்தில் சரிவர மழை பெய்ய வில்லை.
பருவமழை தொடங்கிய சமயத்தில் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இதன் காரணமாக வட மாவட்டங்களில் மட்டும் மழை பெய்தது. அதன்பிறகு, புயல் உருவானது. அது, ஆந்திராவிற்கு சென்று விட்டது.
புயலுக்குப் பின் அமைதி என்ற சொல்லுக்கு ஏற்ப பருவமழை நீண்ட நாள் விடுப்பு எடுத்துக்கொண்டது. இப்படிபட்ட நிலையில், கடந்த வாரம் முதல் வானிலையில் மாற்றம் ஏற்பட்டது.
வங்கக் கடல் பகுதியில் காற்றின் மேலடுக்கில் சுழற்சி ஏற்பட்டதால், கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய தொடங்கியது. குறிப்பாக, தென் மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
அதுவும், நேற்று முன் தினத்திலிருந்து நெல்லை, குமரி, தென்காசி, தூத்துக்குடி, இராமநாதபுரம், மதுரை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்ய தொடங்கியது.
நேற்று பகலிலும், இரவிலும் இடைவிடாமல் அடை மழை போல் பெய்து வருகிறது. ேநற்று காலையிலும் இந்த மழை நீடித்தது. இதனால், பல இடங்களில் 20 செ.மீ.க்கும் மேலும் மழை பதிவாகி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள நாலுமுக்கு என்ற இடத்தில் 26 செ.மீ. மழை பெய்துள்ளது. ஊத்து என்ற இடத்தில் 25 செ.மீ., காக்காச்சி 23 செ.மீ., மாஞ்சோலை 23 செ.மீ., மழை பதிவானது. தூத்துக்குடி திருச்செந்தூர் , குலசேகரன் பட்டினம் ஆகிய ஊர்களில் தலா 13 செ.மீ., மழை பதிவானது. கயத்தாறு –11 செ.மீ., காயல்பட்டினம் 10 செ.மீ., சாத்தான்குளம் 9 செ.மீ., என்ற அளவிலும் மழை பெய்துள்ளது.
இதனால், தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. குளங்கள் நிரம்பி வருகின்றன. தாமிர பரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
டெல்டா மாவட்டங்களில் அடை மழை பெய்து வருகிறது. இதனால், விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பெய்த மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த பயிர்கள் நாசமடைந்தன.
இப்போது, தாளடி சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது பெய்து வரும் மழையால் நெல் நடவு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் , வங்க கடலின் தென்கிழக்குப் பகுதியில் தெற்கு அந்தமான் பகுதியை ஒட்டி நேற்று முன் தினம் குறைந்த காற்றழுத்தம் உருவானது. இது மேற்கு – வட மேற்கு திசையில் நகர்ந்து படிபடியாக வலுவடைந்து வருகிறது.
அடுத்த 24 மணிநேரத்திற்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும், அதற்கு அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறும் கணிக்கப்பட்டுள்ளது. புயலாக உருவெடுத்தால், அதற்கு சென்யார் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுவும் தமிழகத்தை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. இதன்மூலம், வட தமிழ்நாட்டில் இனி வரும் நாட்களில் கனமழையை எதிர்பார்க்கலாம்.
இப்படிபட்ட நிலையில், வங்க கடலில் இலங்கைக்கு அருகே நேற்று இன்னொரு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளது என்று அகில இந்திய வானிலை இலாகா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை நீடிக்கும்.
இப்படிபட்ட நிலையில் தமிழ்நாட்டிற்கு நேற்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இதனால், பல இடங்களில் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் வாய்ப்புள்ளது. ேநற்று கனமழை காரணமாக 17 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கி சாவு
இது ஒருபுறம் இருக்க தமிழ்நாட்டில் 2 நாளில் மழைக்கு 4 பேர் பலியாகி உள்ளார்கள். நேற்று கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சாத்தமங்கலம் என்ற கிராமத்தில் கனமழையால் புளியமரம் ஒன்று சாய்ந்தது. இது ஒரு வீட்டின் மீது விழுந்தது. அதனால் மின் கம்பிகள் அறுந்தன.
அப்போது மின்சாரம் தாக்கி மரியசூசை (வயது 70), அவரது மனைவி அந்தோணி பிளவுன் மேரி (வயது 60), அவரது உறவினர் வனதாஸ் மேரி (வயது 70) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் நேற்று தூத்துக்குடியில் ஒருவர் உயிரிழந்தார். அவரது பெயர் பழனியாண்டி (வயது 75). தூத்துக்குடி கணேஷ் நகர் பகுதியைச் சேர்ந்தவர். ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று அதிகாலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது மழையால் மின்கசிவு ஏற்பட்டு, அந்த மின்சாரம் தாக்கி அவர் உயிரிழந்தார்.