தமிழக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சியினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த தேர்தலில் 4 முனை போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் பா.ம.க.வில் டாக்டர் ராமதாஸ் ஒரு அணியாகவும், அவரது மகன் அன்புமணி மற்றொரு அணியாகவும் பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இருவரும் மாம்பழம் சின்னம் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடி வருகின்றனர்.
அன்புமணி தலைமையிலான பா.ம.க., அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து விட்டது. ராமதாஸ் தலைமையிலான பா.ம.க.வினர் தி.மு.க. கூட்டணிக்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தி.மு.க. கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ம.க.வை சேர்த்தால் நாங்கள் வெளியேறிவிடுவோம் என தெரிவித்தனர். இதனால் ராமதாஸ் எந்த அணியில் இணைவார் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்த நிலையில் கடந்த வாரம் பா.ம.க. தலைமை நிர்வாக குழு மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகளை அழைத்து கூட்டணி தொடர்பாக ராமதாஸ் கருத்துக்களை கேட்டறிந்தார். இதில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்தனர். சிலர் தி.மு.க.வுடன் கூட்டணி வைக்கலாம் என்றும் ஒரு சிலர் த.வெ.க.வுடன் கூட்டணி அமைக்கலாம் எனவும் கூறியிருந்தனர். இதனால் ராமதாஸ் குழப்பமான நிலையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதையடுத்து கூட்டணி தொடர்பாக பா.ம.க. இளைஞர், மகளிர், மாணவர் சங்கம், பாட்டாளி சமூக ஊடக பேரவை, மாநில, மாவட்ட, ஒன்றிய, பேரூர்,மாநகர, நகர பகுதி நிர்வாகிகளை சந்தித்து அவர்களின் கருத்துக்களை கேட்க ராமதாஸ் முடிவு செய்திருந்தார். அதற்கான கூட்டம் தைலாபுரம் தோட்டத்தில் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தை தொடர்ந்து டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:- கூட்டணி குறித்து முடிவு செய்யப்படவில்லை. விரைவில் முடிவு செய்து 3 நாட்களில் உறுதி செய்யப்படும். அடுத்த 3 நாட்களில் தமிழக அரசியல் பரபரப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.