மதுரை பழங்காநத்தம் பகுதியில் உள்ள மாவட்ட இணைப் பதிவாளர் (கூட்டுறவு) அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் கூட்டுறவுத்துறை அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் திங்கள்கிழமை கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ராமநாதபுரம் மண்டல கூட்டுறவு சார் பதிவாளர் வேல்முருகன் மீதான பணி நீக்க ஆணையை ரத்து செய்ய வேண்டும், பதிவாளரின் ஊழியர் விரோத போக்குகளையும், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) தன்னிச்சையான மற்றும் தவறான அணுகுமுறையையும் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத் தலைவர் தாமோதர ராவ் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தமிழ் மற்றும் மாவட்டப் பொருளாளர் பரமசிவம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆசிக் ரசூல் கோரிக்கைகளை விளக்கி உரையாற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தெற்கு வட்டக் கிளைத் தலைவர் பஞ்சவர்ணம், கிளைச் செயலாளர் பிரேமலதா, மேற்கு வட்டக் கிளைச் செயலாளர் ராஜா, தெற்கு வட்ட துணைத் தலைவர் மகுடீஸ்வரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அழகர்சாமி உள்ளிட்ட ஏராளமான கூட்டுறவுத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில், வேல்முருகன் மீதான பணி நீக்க ஆணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், அனைத்து பணிகளுக்கும் புதிய அவகாசம் வழங்கி பணியாற்ற உத்தரவிட வேண்டும், இனி வரும் காலங்களில் "கண்காணிக்க தவறினார்" என்ற காரணத்தைக் கூறி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது, அனைத்து நிலைகளிலும் பதவி உயர்வு வழங்க அரசாணை வெளியிட வேண்டும், அரசாணை வெளியிடப்பட்டு ஓராண்டு ஆகியும் பணி அமர்வு ஆணை வழங்கப்படாத மூன்று துணைப் பதிவாளர்களுக்கு உடனடியாக பணி அமர்வு ஆணை வழங்க வேண்டும், அனைத்து நிலைகளிலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொதுப்பணியிட மாறுதல்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இறுதியாக, மாவட்டப் பொருளாளர் குறிஞ்சி இளவரசன் நன்றியுரை வழங்கினார்.