10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று முதல் தொடங்கி உள்ளது.

தமிழகத்தில் 10-ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 11 முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இத்தேர்வை பள்ளி மாணவர்கள் 8 லட்சத்து 82,806 பேர், தனித்தேர்வர்கள் 26,196 பேர் என மொத்தம் 9 லட்சத்து 9,002 பேர் எழுதவுள்ளனர். இவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு கடந்த 23-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான செய்முறைத் தேர்வு நேற்று (பிப். 26) முதல் நாளை 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளன. இந்த செய்முறைத் தேர்வுகள் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறை பயிற்சி நடைபெற்ற பள்ளிகளிலேயே நடத்தப்படும். எனவே, தேர்வர்கள் தவறாமல் செய்முறைத் தேர்வெழுத வேண்டும். மேலும், செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியலை சம்பந்தப்பட்ட மாவட்ட தேர்வுத் துறை அலுவலகத்தில் மார்ச் 2-ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இந்த மதிப்பெண் பட்டியல்களை இணையவழியில் பதிவு செய்ய வேண்டுமென மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தேர்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.