8-ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற புதிய தலைப்பில் இடம் பெற்றுள்ள கருத்துக்களுக்கு சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த் கடும் கண்டனம் தெரிவித்தார்.

இது குறித்து நீதித்துறையின் தலைவராக தனது எதிர்ப்பை பதிவு செய்வதாக கூறிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று எனக்குத் தெரியும். இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும். இது ஒரு திட்டமிட்ட சதி போலத் தோன்றுவதாக காட்டமாக தெரிவித்தார்.

இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டின் கடும் கண்டனத்தை அடுத்து 8-ம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் நீதித்துறை குறித்து தவறான தகவல்கள் இடம்பெற்றது எதிர்பாராமல் நடந்த ஒரு தவறு. அதற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். நீதித்துறையை நாங்கள் உயர்வாக மதிக்கிறோம். அந்தப் பாடம் முழுமையாக நீக்கப்பட்டு, புதிய கல்வி ஆண்டிற்குள் (2026-27) புதிய பாடம் வழங்கப்படும் என்று தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எட்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் நீதித்துறையில் ஊழல் என்ற பாடம் சேர்க்கப்பட்டது தொடர்பாக மத்திய அரசு மன்னிப்பு கோரியது. நீதித்துறை ஊழல் பாடத்தை புத்தகத்தில் சேர்ந்தவர் தண்டனையை ஏற்றுக் கொள்வார் என்றும் அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா விளக்கம் அளித்தார். பாடத்திட்டம் முழுமையாக மாற்றப்படும் என்றும் இந்த விவகாரத்தில் தொடர்புடையோர் இனி அந்த பணியில் தொடர மாட்டர் என்றும் துஷார் மேத்தா உறுதி அளித்தார்.

இதையடுத்து நீதித்துறையில் ஊழல் என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட தேசிய கல்வி ஆராய்ச்சி மற்​றும் பயிற்சி கவுன்​சிலின் எட்டாம் வகுப்பு பாடத்திற்கு தடை விதித்து சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்தது. நீதித்துறை ஊழல் என்ற பாடம் மூலம் நீதித்துறை மீது துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்தம் சொட்டுகிறது என்று காட்டமாக தெரிவித்த தலைமை நீதிபதி, பாடப்புத்தகம் தயாரித்தோர் மீது நடவடிக்கை எடுப்பதுடன் உத்தரவை அமல்படுத்தியதற்கான அறிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவு பிறப்பித்தார்.