சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில், பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.
கூட்டத்தில், ஜம்மு-காஷ்மீர் குறித்து பாகிஸ்தான் மற்றும் இஸ்லாமிய நாடுகளை உள்ளடக்கிய இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு எழுப்பிய புகார்களுக்கு இந்தியாவின் பிரதிநிதி அனுபமா சிங் பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது,
பாகிஸ்தானின் தவறான பிரச்சாரங்களை அப்படியே திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளையாக இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு மாறிவிட்டது. ஒரு நாட்டின் அரசியல் உள்நோக்கங்களுக்கு அந்த அமைப்பு ஒரு ஊதுகுழல் போல செயல்படுகிறது. ஜம்மு - காஷ்மீர் இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதி. அது எப்போதும் அப்படியே இருக்கும். பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதியை உடனடியாக காலி செய்ய வேண்டும். தனது ஆட்சிக் காலத்தை கூட முழுமையாக முடிக்க முடியாத ஒரு நாடு (பாகிஸ்தான்), ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. சமீபத்திய காஷ்மீர் தேர்தலில் பதிவான சாதனை அளவிலான வாக்குகள், மக்கள் பயங்கரவாதத்தை நிராகரித்து ஜனநாயகத்தை ஏற்றுக்கொண்டதற்கான சான்று.
ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சி பட்ஜெட், பாகிஸ்தான் சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியுள்ள உதவித் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம். உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பதை கூட பாகிஸ்தான் பொய் என்று கூறினால், அது லா-லா லேண்ட் (கற்பனை உலகில்) வாழ்வதாக அர்த்தம் என்று தெரிவித்தார்.