சென்னை: 'தமிழகத்தில் ஆட்டோ கட்டணம் உயர்வுக்கான அறிக்கை, அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், திருத்தப்பட்ட புதிய கட்டணம் விரைவில் வெளியாகும்' என, போக்குவரத்து ஆணைய ரக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

தமிழகத்தில் ஓடும், 3.46 லட்சம் ஆட்டோக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து, 13 ஆண்டுகள் ஆகி விட்டன. புதிய கட்டண நிர்ணயம் குறித்து, சென்னையில் கடந்த மாதம் 9ம் தேதி முத்தரப்பு பேச்சு நடந்தது. இதில், 30க்கும் மேற்பட்ட தொழிற்சங்க நிர்வாகிகளும், பயணியர் அமைப்புகளில் இருந்து, 90 பேரும் பங்கேற்றனர். தொழிற்சங்கங்கள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணத்தை, 70 ரூபாயாக உயர்த்த வலியுறுத்தினர். பயணியர் அமைப்புகளின் நிர்வாகிகள் தரப்பில், குறைந்தபட்ச கட்டணம், 50 ரூபாயாக நிர்ணயம் செய்ய வலியுறுத்தினர்.

இது குறித்து, தமிழக போக்குவரத்து ஆணை யரக அதிகாரிகள் கூறியதாவது: முத்தரப்பு பேச்சில் நடந்த முக்கிய அம்சங்களை ஆராய்ந்தும், தற்போதுள்ள எரிபொருள் செலவு, மற்ற நகரங்களில் உள்ள ஆட்டோ கட்டணம் உள்ளிட்ட சிறப்பு அம்சங்களை முன்வைத்தும் ஒரு அறிக்கை தயாரித்தோம். இந்த அறிக்கை, தமிழக உள்துறையிடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிக்கையை ஆய்வு செய்து, தமிழக அரசு, விரைவில் ஆட்டோ கட்டண உயர்வை அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.