அமெரிக்கா சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது என சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அருணாச்சல பிரதேச விவகாரத்தில் இந்தியா மற்றும் சீனா இடையே மீண்டும் மோதல் போக்கு ஏற்படும் என்று அமெரிக்காவின் பென்டகன் அறிக்கை வெளியிட்டு இருந்தது. அந்த அறிக்கையில்,

சீனா அதன் நட்புநாடான பாகிஸ்தானைப் போல, ராணுவத்தின் மூலம் தொடர்ச்சியான அழுத்தம் கொடுக்கும். எனவே, இனி வரும் ஆண்டுகளில் இந்தியா - சீனா இடையிலான உறவு பாதிக்கப்படும் என பென்டகன் கூறியிருந்தது. இந்த அறிக்கையை சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. இது குறித்து சீன வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் கூறியதாவது:

பென்டகனின் அறிக்கை சீனாவின் பாதுகாப்புக் கொள்கையை திரிக்கும் வகையில் உள்ளது. சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே பொய்யான கதைகள் மூலம் கருத்து வேறுபாட்டை உருவாக்குகிறது. இந்தியாவுடன் முரண்பாடுகளை உருவாக்குகிறது. இந்தியாவுடனான எல்லை நிலைமை நிலையானது. அமெரிக்கா தனது ராணுவ மேலாதிக்கத்தைத் தக்க வைத்துக் கொள்ள ஒரு சாக்குப்போக்கைக் கண்டுபிடிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. சீனா இந்த அறிக்கையை உறுதியாக எதிர்க்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.