மதுரை, செப்.3-

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக அச்சடிக்கப்பட்டுள்ள 11 ஆயிரம் விஐபி பாஸ்களில் 9 ஆயிரம் பாஸ்களை தனக்கு ஒதுக்குமாறு அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் கேட்டிருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதனால் கோயில் நிர்வாகத்தின் என்ன செய்வதென தெரியாமல் புலம்பி வருகின்றனர்.

மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு செப்டம்பர் 17ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. 17 ஆண்டுகளுக்கு பின் நடக்கும் குடமுழுக்கு என்பதால், லட்சக்கணக்கானோர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் குடமுழுக்கு விழாவுக்கான அழைப்பிதழ் தொடங்கி தொடர்ச்சியாக பல்வேறு சர்ச்சைகள் அரங்கேறி வருகின்றன.

இதன் பின்னணியில் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் மற்றும் தவெகவினர் இருப்பதாக சில விமர்சனங்கள் எழுந்துள்ளன. முதல் சர்ச்சையாக அழைப்பிதழில் அறங்காவலர்கள் பெயர்கள் இடம்பெறவில்லை. முன்னாள் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தாயார் ருக்மணி அறங்காவலர் குழு தலைவராக இருப்பதால், அறங்காவலர் குழுவினர் பெயர் புறக்கணிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு பணிகளை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் பெயரை சொல்லி தவெகவினர் தொடர்ச்சியாக ஆய்வு என்ற பெயரில் கோயில் நிர்வாகிகளை கொடுமைபடுத்த தொடங்கி இருக்கின்றனர். மீனாட்சியம்மன் கோயிலுக்கு புதிய கலசம் மாற்றப்படுமா என்பது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் உரிய பதில் கிடைக்கவில்லை.

சமஸ்கிருத அர்ச்சகர்கள் பெயர் அழைப்பிதழில் இடம்பெற்றுள்ள போதும், தமிழ் ஓதுவார்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. அதேபோல் அழைப்பிதழில் ஏராளமான எழுத்து பிழைகளும், பெயர் பிழைகளும் இருக்கின்றன. இதற்கெல்லாம் உச்சமாக விஐபி பாஸ்களில் மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. வழக்கமாக கோயில் குடமுழுக்கின் போது விஐபி பாஸ் கொடுப்பது வாடிக்கையானது தான்.

ரூ.1 லட்சத்திற்கு மேல் நன்கொடை கொடுப்பவர்களுக்கு விஐபி பாஸ் வழங்கப்படும். அதேபோல் அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு விஐபி பாஸ் அளிக்கப்படும். மீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு விழாவிற்காக மொத்தமாக 11 ஆயிரம் பாஸ்கள் வழங்கப்பட உள்ளன. அதில் 9 ஆயிரம் பாஸ்களை அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தரப்பு கேட்டுள்ளது.

இன்னொரு பக்கம் தவெக எம்எல்ஏக்கள் தங்களுக்கு இத்தனை பாஸ்கள் வேண்டுமென்ற கெடுபிடி விதித்துள்ளனர். இதனால் கோயில் நிர்வாகம் மிரண்டுபோயிருக்கிறது. ஏனென்றால் குடமுழுக்கு விழாவில் ஈடுபடும் அத்தனை துறைகளின் நிர்வாகிகளும் சில 100 பாஸ்களை கேட்பார்கள். ஆனால் ஒரே ஆள் இத்தனை ஆயிரம் பாஸ்களை வாங்கி சென்றால், என்ன செய்வது என்று புலம்ப தொடங்கியுள்ளனர்.