ராமநாதபுரம், செப். 20-

சென்னை விமான நிலையத்தை தனியார்மயம் ஆக்குவது ஆரோக்கியமானதாக இருக்காது என்று அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

பேருந்து, ரயில்வே, விமான நிலையம், மின்சாரம் ஆகியவை அரசிடம் இருந்தால் தான் மக்களுக்கு முழு உரிமை இருக்கும் என்று கூறிய நிர்மல்குமார், அதுதான் தவெக அரசின் எண்ணம் என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலைய நிர்வாகத்தை தனியார் வசம் ஒப்படைக்க பிரதமார் நரேந்திர மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அந்த கடிதத்தில், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு தொடர்ந்து முதன்மை மாநிலமாக இருந்து வருகிறது. அதன் வளர்ச்சிக்கு சர்வதேச அளவிலான விமான நிலைய உட்கட்டமைப்பும், நிர்வாகமும் முக்கியமானவை.

பயணிகள் எண்ணிக்கை, விமானங்களின் இயக்கம், சரக்கு கையாளும் திறன் ஆகிய 3 அம்சங்களிலும் சென்னை விமான நிலையம் மேம்பட வேண்டும். தொழில் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் தமிழ்நாட்டிற்கு சிறப்பு விமான நிலையம் அவசியம் என்பதால், தற்போதைய ஆபரேட்டர் - நிர்வாகமான இந்திய விமான நிலைய ஆணையத்தை மாற்றி வேறு ஆபரேட்டர் நிர்வாகத்தை கொண்டு வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்திய விமான நிலையம், அதானி நிறுவனம் மற்றும் ஜிஎம்ஆர் ஆகிய 3 மட்டுமே விமான நிலையங்களை நிர்வகித்து வருகிறது. டெல்லி,ல் ஐதராபாத் உள்ளிட்ட விமான நிலையங்கள் தனியார் வசம் சென்றுவிட்டன. இந்திய விமான நிலையம் அல்லாமல் வேறு ஆபரேட்டர் என்று விஜய் கடிதம் எழுதி இருப்பதன் மூலமாக, சென்னை விமான நிலையத்தை தனியாருக்கு தாரை வார்க்க தவெக அரசு விரும்புவதாக தெரிகிறது.

அதுமட்டுமல்லாமல் ஆகஸ்ட் மாதத்திலேயே முதல்வர் விஜய் இந்த கடிதத்தை பிரதமர் மோடிக்கு அனுப்பி இருக்கிறார். ஆனால் சுமார் ஒரு மாதமாக கடிதம் தொடர்பாக எந்த தகவலும் வெளியிட

ப்படவில்லை. இந்த கடிதம் எழுதப்பட்ட பின்னர் தான் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை ரத்து செய்வதாக முதல்வர் விஜய் அறிவித்தாரா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமார் பேசுகையில், பேருந்து, ரயில், விமான நிலையங்கள், மின்சாரம் போன்றவை அரசுடன் இருந்தால் தான் மக்களுக்கு முழு உரிமை இருக்கும். தனியார் வசம் சென்றுவிட்டால், அது மக்களுக்கு விலை உயர்ந்த ஒன்றாக மாறிவிடும். அதுதான் தவெகவின் எண்ணம். அதனை நோக்கி தான் பயணிக்கிறோம்.

தனியார்மயம் ஆரோக்கியமானது கிடையாது. அப்படி தனியார் வசம் சென்றுவிட்டால், அவை பொதுமக்களுக்கு எட்டாக்கனியாக மாறிவிடும் என்று தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் கொடுக்க விஜய் கடிதம் எழுதி இருக்கும் சூழலில், அமைச்சர் நிர்மல்குமாரின் கருத்து முரண்பாட்டுடன் இருப்பது விவாதமாகி இருக்கிறது.