மதுரை, செப். 20-
மதுரையில் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில், போலீஸ் நிலையம் அருகே ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாநகர் சோலை அழகுபுரம் சப்பாணி கோவில் தெருவைச் சேர்ந்தவர் சப்பாணி சரவணன் (50). இவர் மீது ஏற்கனவே பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பதாக கூறப்படுகிறது. சில வழக்குகளில் சிறை சென்று திரும்பிய சரவணன், தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.
இந்த நிலையில், சோலை அழகுபுரம் பிரதான சாலையில் உள்ள டீக்கடைக்கு சரவணன் தினமும் சென்று வருவதை மர்ம கும்பல் ஒன்று தொடர்ந்து கண்காணித்து வந்ததாக கூறப்படுகிறது. வழக்கம்போல் இன்று அதிகாலையும் அவர் அந்த பகுதியில் இருந்தபோது, ஆயுதங்களுடன் வந்த 5 பேர் கொண்ட கும்பல் திடீரென அவரை சுற்றி வளைத்ததாக தெரிகிறது.
கையில் வாள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்த அந்த கும்பல் சரவணனை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. உயிருக்கு பயந்து அவர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். ஆனால் அந்த கும்பல் விடாமல் அவரை துரத்திச் சென்று மீண்டும் தாக்கியதாகவும், இதில் பலத்த காயமடைந்த சரவணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் நடமாட்டம் உள்ள சாலையில், ஜெய்ஹிந்த்புரம் போலீஸ் நிலையத்துக்கு அருகிலேயே இந்த கொலை நடந்தது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலை நேரத்திலேயே ஆயுதங்களுடன் மர்ம கும்பல் நடமாடி கொலை செய்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
தகவல் அறிந்த ஜெய்ஹிந்த்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். கொலைக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஆயுதங்களையும் கைப்பற்றினர். மேலும், அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் இனிகோ திவ்யன் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார். கொலை தொடர்பாக சந்தேகப்படும் நபர்கள் குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். குறிப்பாக, சரவணன் மீது ஏற்கனவே வழக்குகள் இருந்துள்ள நிலையில், பழைய முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
மதுரையில் அதிகாலை நேரத்தில் பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பிரதான சாலையில், போலீஸ் நிலையம் அருகே ஒருவர் ஓட ஓட விரட்டி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் முன்விரோதமா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.