நடைபெற இருக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை பொது தேர்தலுக்கு தி.மு.க.வின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர்கள் கடந்த 20-ம் தேதி முதல் 2-ம் தேதி வரை கட்சி தலைமை அலுவலகத்தில் விண்ணப்பித்திட வேண்டும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. தினந்தோறும் அண்ணா அறிவாலய வளாகத்தில் அதிகாலை முதலே தொண்டர்கள் திரள ஆரம்பித்து, மாலை வரை நீண்ட வரிசையில் காத்திருந்து மனுக்களை சமர்ப்பிக்கும் சூழல் சூழல் நிலவியது. தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க வரும் 6-ம் தேதி மாலை 5 மணி வரை விருப்பமனுக்களை வழங்கலாம் என்று அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
தமிழகத்தின் அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விருப்பம் தெரிவித்து கட்சி நிர்வாகிகள், முன்னாள் பொறுப்பாளர்கள், இளைஞர் அணியினர் மற்றும் நீண்ட கால தொண்டர்கள் என பலரும் ஆர்வத்துடன் மனுக்களை பெற்றும் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர். இந்நிலையில் தி.மு.க. சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் போட்டியிட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விருப்பமனு அளித்தார். இதே தொகுதியில் கடந்த 2 முறை போட்டியிட்டு அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.