நாகர்கோவில்: நாகர்​கோவில் கிளைச்சிறையில் கைதி அடித்துக் கொலை செய்யப்பட்டது, பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்​து, சிறைக்​காவலர்​கள் 3 பேர் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.


குமரி மாவட்டம் ஈத்தங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சபரிவர்மன் (33). இவர் தனது வீட்​டின் அருகே பெட்​டிகடை நடத்தி வந்தார். கடந்த 9-ம் தேதி சபரிவர்மன் கடை​யில் புகையிலை பொருட்கள் இருந்ததாக கூறி, போலீஸார் கைது செய்து நாகர்​கோவில் கிளைச் சிறையில் அடைத்தனர். சிறையில் சபரிவர்மன் நேற்று முன்​தினம் காலை திடீரென மயங்கி விழுந்​தார். உடனடியாக, சிறை அலுவலர்​கள் அவரை ஆசாரிபள்​ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்​றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உடலை பார்க்கவேண்டும் என்றும் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்​பி ஸ்டாலின், நீதிபதி ஆகியோர் நேற்று நாகர்​கோவில் கிளை சிறையில் சிறை காவலர்கள் மற்​றும் சக கைதிகளிடம் விசாரணை நடத்​தினர். இதற்கிடையில், சபரிவர்மனின் உடலில் காயங்கள் இருப்பதாக பிரேத பரிசோதனையில் தெரிய​வந்தது. இதனால், சபரிவர்​மன் உறவினர்​கள் அவரது உடலை பெற்​றுக் கொள்ளவில்லை. இதனிடையே, சபரிவர்​மனின் உடலில் 19 இடங்​களில் காயங்கள் இருந்ததும், அவரது மரணத்​துக்கு அதுவே காரணம் என்பதும், பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது. இதையடுத்து, நாகர்​கோவில் கிளைச்​சிறை தலைமைக் காவலர் ஜெகன், முதன்மை தலைமைக் காவலர் திருமலைநம்பி, சிறைக்​காவலர் சிவகுமார் ஆகிய மூவரும் நேற்றிரவில் கைது செய்யப்பட்டனர்.