சட்டசபை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருந்த போது தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த முருகானந்தம் மாற்றப்பட்டார். அவருக்கு பதில் புதிய தலைமைச்செயலாளராக சாய்குமார் கடந்த ஏப்ரல் 8 ம் தேதி நியமிக்கப்பட்டார். விஜய் தலைமையில் தவெக அரசு அமைந்த பிறகு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள், டிஜிபி, ஐஜி , டிஐஜி, கமிஷனர்,எஸ்பி என பலர் மாற்றப்பட்ட நிலையில் தலைமைச் செயலாளர் மட்டும் மாற்றம் செய்யப்படவில்லை. சாய்குமாரின் பணிக்காலம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. தொடர்ந்து அவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டு இருந்தது. இந்நிலையில், அவரின் பணிக்காலம் மேலும் 6 மாதம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 1990ம் ஆண்டு பேட்ச் ஐஏஎஸ் அதிகாரியான இவர், மதுரை, விருதுநகர், தர்மபுரி மாவட்ட கலெக்டராகவும், தமிழக மின்வாரிய தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர். தமிழ்நாடு தெழில் முதலீட்டு கழகத்தின் தலைவர், நகராட்சி நிர்வாக ஆணையர், தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர், பொதுப்பணித்துறை செயலாளர் உள்ளிட்ட பதவிகளையும், அதிமுக ஆட்சியில் இபிஎஸ் முதல்வராக இருந்த போது, அவரின் முதன்மை ஆலோசகர் ஆகவும் பணியாற்றி உள்ளார்.