திருவனந்தபுரம்: அறுவடைத் திருநாளாம் ஓணம் பண்டிகை கேரளத்தில் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
கேரள மாநிலத்தின் அறுவடைத் திருநாள் என்று அழைக்கப்படும் ஓணம் பண்டிகை ஜாதி, மதம் வேறுபாடு இல்லாமல் மலையாள மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. மலையாள வருடத்தின் கொல்லம் வருஷத்தின் சிங்கம் மாதத்தில் 10 நாட்கள் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. மகாபலி மன்னரை வரவேற்று வீடுகளின் வாசலில், பூக்களால் அத்தப்பூ கோலமிட்டு, சத்யா உணவை உறவினர்களுடன் உண்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக, வயநாட்டின் இரூலம் கிராமத்தில் 1,000க்கும் மேற்பட்ட கிராம மக்கள் இணைந்து, இரவோடு இரவாக அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் 25,000 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமான பூக்கோலத்தை உருவாக்கியுள்ளனர். இந்தப் பூக்கோலத்திற்காக, கர்நாடகாவிலிருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 10,000 கிலோ மலர்கள் பயன்படுத்தப்பட்டன. இரூலம் கிராம மக்களுக்கு பரீட்சையமான 'மணியன்' என்ற காட்டு யானையின் நினைவாக, அதன் உருவம் இந்தப் பூக்கோலத்தின் மையத்தில் அமைக்கப்பட்டது.
கேரளா மட்டுமல்லாது, அண்டை மாநிலமான தமிழகத்திலும் இந்த பண்டிகை களைகட்டியுள்ளது. கோவை, நீலகிரி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலும் மலையாளிகள் அதிகம் வசிப்பதால், இங்கும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.