கராச்சி: இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.95,000 கோடி நிதி கேட்டு அமெரிக்காவுக்கு, பாகிஸ்தான் கடிதம் எழுதி இருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சீனா, சவூதி, குவைத் உள்ளிட்ட நாடுகளிடம் வாங்கி இருக்கும் சுமார் 12.3 பில்லியன் டாலர் கடனை அடைக்க வழியில்லாமல் பாகிஸ்தான் திணறி வருகிறது. இந்த சூழலில் ஈரான் உடனான போரில் தூது சென்றதை சாதகமாகப் பயன்படுத்தி அமெரிக்காவிடம் நிதியுதவி கோரி உள்ளது பாகிஸ்தான். இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், பண நெருக்கடியில் சிக்கியுள்ள பாகிஸ்தானின் பொருளாதாரத்திற்கு இது ஒரு உயிர்நாடியாக அமைய கூடும். ஈரான் போர் தொடர்பான பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியஸ்தம் செய்ததை மனதில் வைத்து தங்களுக்கு அமெரிக்கா நிச்சயம் உதவி செய்ய கூடும் என்று பாகிஸ்தான் தரப்பு பெரும் நம்பிக்கை கொண்டுள்ளது.

அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்டுடனான சந்திப்பின் போது பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் வழங்கிய கடிதத்தில், இந்த கோரிக்கை விடுக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்து உள்ளார். அந்த கடிதத்தில் அமெரிக்கா - பாகிஸ்தான் அரசாங்கங்களுக்கு இடையில் 10 பில்லியன் டாலர் மதிப்பிலான, ஐந்து ஆண்டுகள் வரையிலான முதிர்வுக் காலத்துடன் கூடிய இருதரப்புப் பரிவர்த்தனை நிலைப்படுத்தல் ஆதரவு வசதியை உருவாக்கி தருமாறு பாகிஸ்தான் கோரி உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அமெரிக்காவில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் பாகிஸ்தானுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடித்து வருவதால், இந்த கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன