ஏதென்ஸ்: கிரீஸ் நாட்டின் தலைநகரான ஏதென்ஸ் அருகே காட்டுத்தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 2 தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விபத்தில் இரண்டு வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் இருவர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோஷியல் மீடியாக்களில் வெளியாக காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.

ஐரோப்பிய நாடான கிரீஸின் தலைநகர் ஏதென்ஸ்-க்கு மேற்கே உள்ள வனபகுதிகளில் அதிவேகமாக காட்டுத்தீ பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தீ அணைப்பு பணியில் ஈடுபட்டிருந்த 2 ஹெலிகாப்டர்கள் எதிர்பாராதவிதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. விபத்தில் ஒரு ஹெலிகாப்டர் தரையில் விழுந்து சேதமடையும் காட்சி வீடியோவில் பதிவாகி உள்ளது.

இதனிடையே நடுவானில் மோதி கொண்ட இரு ஹெலிகாப்டர்களிலும் தலா 2 விமானப் படை வீரர்கள் என மொத்தம் 4 பேர் இருந்ததாகவும், இதில் 2 பேர் உயிரிழந்துவிட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. மிக குறைந்த உயரத்தில் தண்ணீரை ஊற்றித் தீயை அணைக்க முயன்றதாலேயே, இரண்டு ஹெலிகாப்டர்களின் சுழல் இறக்கைகள் எதிர்பாராதவிதமாக நடுவானில் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.