மதுரை: அனைவருக்கும் தரமான கண் மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அரவிந்த் கண் பராமரிப்பு அமைப்பு, தனது 50 ஆண்டுகால சேவைப் பயணத்தை பொன்விழாவாகக் கொண்டாடுகிறது. இதையொட்டி, மதுரையில் வரும் 20ஆம் தேதி (20.09.2026) பொன்விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
அரவிந்த் கண் மருத்துவமனையின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஜி. வெங்கடசாமியின் தொலைநோக்குப் பார்வையில் தொடங்கிய இந்தப் பயணம், கடந்த ஐந்து தசாப்தங்களில் கண் மருத்துவச் சேவை, கல்வி, ஆராய்ச்சி, பயிற்சி, தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் விரிவடைந்துள்ளது.
அரவிந்த் கண் பராமரிப்பு அமைப்பின் தலைவர் மற்றும் இயக்குநர்-தரம் டாக்டர் ஆர்.டி. ரவீந்திரன், கௌரவ இயக்குநர் டாக்டர் ஜி. நாச்சியார், இயக்குநர்-செயல்பாடுகள் மற்றும் LAICO-வின் நிர்வாக இயக்குநர் எமரிட்டஸ் துளசிராஜ் ரவில்லா, இயக்குநர்-உறைவிடப் பயிற்சி மற்றும் இயக்குநர்-நிதி டாக்டர் ஆர். கிம் ஆகியோர் பொன்விழாவையொட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:
11 படுக்கைகளுடன் தொடங்கிய அரவிந்த் கண் மருத்துவச் சேவை, இன்று 16 மருத்துவமனைகள், 120 பார்வை மையங்கள் (Vision Centres), 8 சமூகக் கண் மருத்துவ மையங்கள் என விரிவடைந்துள்ளது. அனைவருக்கும் தரமான கண் மருத்துவச் சேவை கிடைக்க வேண்டும் என்பதே அரவிந்தின் முக்கிய நோக்கமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் சிகிச்சை பெறும் வகையில், பாதிக்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாகவோ அல்லது மானிய விலையிலோ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் கண் மருத்துவச் சேவையை சமூகத்தின் அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் பணியில் அரவிந்த் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.
2026 மார்ச் மாதம் வரையிலான தகவலின்படி, அரவிந்த் கண் மருத்துவமனைகள் தொடங்கப்பட்ட காலத்திலிருந்து 9.07 கோடி வெளிநோயாளர் வருகைகளையும், 1.16 கோடி அறுவை சிகிச்சைகளையும் பதிவு செய்துள்ளன. மேலும், ஆண்டுதோறும் 3,000-க்கும் மேற்பட்ட இலவச கண் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
கண் மருத்துவச் சேவையுடன் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கும் அரவிந்த் முக்கியத்துவம் அளித்து வருகிறது. கண் மருத்துவர்களுக்கான பயிற்சி, செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களுக்கான திறன் மேம்பாடு, கண் வங்கி சேவை உள்ளிட்ட பல்வேறு பணிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதேபோல், குறைந்த செலவில் தரமான கண் மருத்துவப் பொருட்களை உருவாக்கும் பணியிலும் அரவிந்த் முக்கிய பங்காற்றி வருகிறது. அரவிந்த் அமைப்பின் ஒரு பகுதியாக செயல்படும் Aurolab மூலம் தயாரிக்கப்படும் கண் மருத்துவப் பொருட்கள் உலகின் பல்வேறு நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
கண் மருத்துவ நிறுவனங்களின் செயல்திறன் மற்றும் சேவைத் தரத்தை மேம்படுத்தும் வகையில், LAICO மூலம் இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள கண் மருத்துவ நிறுவனங்களுக்கு பயிற்சி மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் அரவிந்தின் அனுபவமும் செயல்முறைகளும் சர்வதேச அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
கடந்த 50 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, ஒரு மருத்துவ நிறுவனத்தின் வளர்ச்சியாக மட்டுமல்லாமல், சமூகத்தின் தேவையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நீண்டகால சேவைப் பயணத்தின் விளைவாகும். தொடக்கத்தில் 11 படுக்கைகளுடன் செயல்பட்ட அரவிந்த், இன்று கோடிக்கணக்கான மக்களின் பார்வையைப் பாதுகாக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது.
அரவிந்தின் பொன்விழா, கடந்த 50 ஆண்டுகால சேவையை நினைவுகூரும் நிகழ்வாக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் கண் மருத்துவச் சேவையை மேலும் அதிகமான மக்களிடம் கொண்டு செல்வதற்கான புதிய இலக்குகளை நோக்கிச் செல்லும் தொடக்கமாகவும் அமையும்.
அனைவருக்கும் தரமான மற்றும் எளிதில் அணுகக்கூடிய கண் மருத்துவச் சேவையை தொடர்ந்து வழங்குவதுடன், கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் சமூகக் கண் மருத்துவத் துறைகளில் தனது பங்களிப்பை மேலும் விரிவுபடுத்துவதற்கான உறுதியையும் இந்தப் பொன்விழா மீண்டும் வெளிப்படுத்துகிறது என்று அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் பள்ளிக் குழந்தைகளுக்கான வெளி நேர விளையாட்டு சூரிய ஒளி படுவது போன்ற விஷயங்களில் ஈடுபடுத்தப்படாமல் இருப்பதால் 14% குழந்தைகள் தற்போது கண்ணாடி போடக்கூடிய மோசமான நிலையில் உள்ளனர் எதிர்காலத்தில் இது 50% அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.