டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஏன்? என்பது குறித்து அ.தி.மு.க. பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே இருக்கும் நிலையில், ஆளும் தி.மு.க.வும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வும், புதுவரவான த.வெ.க.வும் தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஆளும் கட்சியான தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி விட்ட நிலையில், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை எப்போதும் தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு அதன் கூட்டணி கட்சிகளிடையே நிலவி வருகிறது.

இதற்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். அவருடன் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நேற்று காலை டெல்லி விமான நிலையத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி கூறுகையில்,

தமிழக தேர்தலில் ஒன்றாக இணைந்து செயல்படுவது குறித்து அமித் ஷாவிடம் பேசினேன். சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியுடன் கூட்டணி வைப்பது குறித்து எதுவும் பேசவில்லை. எங்களைப் பொறுத்தவரை மிக சுமுகமான, எழுச்சியான கூட்டணி அமைந்துள்ளது. தேர்தலில் எவ்வாறு செயல்பட வேண்டுமென அமித் ஷாவுடன் ஆலோசனை நடத்தினேன். தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில்தான் குழப்பம் இருக்கிறது. அந்தக் கூட்டணியில் காங்கிரஸ் இருக்குமா? என்றே தெரியவில்லை எனத் தெரிவித்தார்.