சென்னை: திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலில் திருச்சி கிழக்கு, சென்னை பெரம்பூர் ஆகிய இரு தொகுதிகளில் வெற்றி பெற்ற முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். கரூர் தொகுதி எம்.ஆர்.விஜயபாஸ்கர், விராலிமலை தொகுதி சி.விஜயபாஸ்கர், பெருந்துறை தொகுதி ஜெயகுமார், அம்பாசமுத்திரம் தொகுதி இசக்கி சுப்பையா ஆகியோர், தங்களின் எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்து விட்டு அ.தி.மு.க.,விலிருந்து த.வெ.க.,வில் இணைந்தனர்.
இவர்களின் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை கோரி, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்த பாஜ நிர்வாகி வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில், பொது நல மனு தாக்கல் செய்தார். ஜூலை 31ம் தேதி இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஐந்து தொகுதிகளுக்கும் ஆகஸ்ட் 24ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்தது. தேர்தல் கமிஷன், மத்திய அரசு, சட்டசபை செயலர், முதல்வர் விஜய் உள்ளிட்டோர், பதிலளிக்கவும் உத்தரவிட்டது.
இதையடுத்து, உயர்நீதிமன்றம் விதித்த தடை இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இடைத்தேர்தலுக்கான தடை நீட்டிக்கப்படுமா? அல்லது தடையை நீக்கி, தேர்தல் நடத்துவதற்கான அனுமதி கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்திருந்தது. இந்த நிலையில், 5 தொகுதிகளுக்கு செப்.,8ம் தேதி வரை இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.