இந்தியாவில் மதுபானம் மற்றும் சர்க்கரை கலந்த பானங்கள் மக்கள் எளிதில் வாங்கும் அளவுக்கு விலை குறைவாக கிடைப்பது பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தல் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. அதன் அறிக்கையில்,

தென்கிழக்கு ஆசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில், மது மற்றும் சர்க்கரை பானங்கள் மீதான வரி விதிப்பு முறை மிகவும் பலவீனமாக உள்ளது. வருமானம் உயர்ந்து வரும் சூழலில், இந்த தயாரிப்புகளின் விலை அதற்கேற்ப உயர்த்தப்படவில்லை. புற்றுநோய், கல்லீரல் பாதிப்பு, உடல் பருமன், நீரிழிவு மற்றும் இதய நோய்களுக்கும் இந்தப் பானங்களுக்கும் நேரடித் தொடர்பு உள்ளது. வரி குறைவாக இருப்பதால், மக்கள் இவற்றை எளிதாக வாங்கிப் பயன்படுத்துவது நோய்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மதுபானங்களின் வீரியத்திற்கு ஏற்ப வரி விதிக்கப்பட வேண்டும் என உலக சுகாதார அமைப்பு பரிந்துரைத்துள்ளது. இந்தியாவில் அத்தகைய முறை பின்பற்றப்படாததால், அதிக போதையுள்ள மதுபானங்களும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. மேலும் குளிர்பானங்கள் மற்றும் சர்க்கரை கலந்த பழச்சாறுகள் மீதான வரி நுகர்வை குறைக்கும் அளவுக்கு போதுமானதாக இல்லை என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.