சென்னை, செப்.5-

2029 நாடாளுமன்றத் தேர்தலைக் குறிவைத்து விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தும் தவெகவின் அடுத்தடுத்த நகர்வுகள், ஆளுங்கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியை மட்டுமல்லாமல், அரசுக்குத் தோள் கொடுத்து வரும் விசிக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கூட்டணிக் கட்சிகளையும் பெரும் அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.

சமீபத்தில் சென்னை தலைமைச் செயலகத்திற்கு ராகுல் காந்தியின் தூதர்களாக வந்த காங்கிரஸ் தலைவர்களை விஜய் அலட்சியமாகத் திருப்பி அனுப்பியதும், ‘ராகுல்தான் பிரதமர் வேட்பாளர், விஜய் தமிழக முதல்வராகவே இருக்கட்டும்’ என காங்கிரஸ் திட்டவட்டமாகக் கூறியதும் ஏற்கனவே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தவெக - காங்கிரஸ் இடையே முற்றி வரும் இந்த மோதல் ஆளுங்கூட்டணிக்குள் தேவையில்லாத குழப்பத்தை உருவாக்குவதுடன், தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பிரித்து பிரதமர் நரேந்திர மோடிக்கே மீண்டும் சாதகமாக அமைந்துவிடும் என விசிக மற்றும் இடதுசாரித் தலைவர்கள் வெளிப்படையாகவே குமுறத் தொடங்கியுள்ளனர்.

மதச்சார்பற்ற வாக்குகள் சிதறும் ஆபத்து

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்து 108 இடங்களைப் பிடித்த தவெக ஆட்சி அமைக்க ஆதரவு தேவைப்பட்டபோது, “மத்தியில் ஆளும் பாஜக போன்ற மதவாத சக்திகளைத் தமிழ்நாட்டுக்குள் நுழைய விடக்கூடாது.. மதச்சார்பற்ற அரசை உருவாக்க வேண்டும்” என்ற ஒற்றை இலக்குடன்தான் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் விஜய் அரசுக்கு முழு ஆதரவை அளித்தன.

ஆனால், ஆட்சிக்கு வந்த 100 நாட்களிலேயே தவெக அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் விஜய்யை தேசிய அளவிலான பிரதமர் வேட்பாளராகப் பேசி வருவது இக்கட்சிகளுக்குப் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேசிய அளவில் பாஜக மற்றும் நரேந்திர மோடியை வீழ்த்துவதே தங்களது பிரதான இலக்கு என இடதுசாரிகளும் திருமாவளவனும் பேசி வரும் நிலையில், எதிர்க்கட்சிகளின் முதன்மை முகமாக விளங்கும் ராகுல் காந்தியை ஓரங்கட்டிவிட்டு, விஜய் தனிப் பிரதமர் வேட்பாளராகக் களம் காண முயல்வது பாஜகவுக்கு எதிரான வாக்குகளைப் பலவீனப்படுத்தும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.

மோடிக்கு மறைமுகமாக உதவும் தேர்தல் உத்தி?

தென்னிந்திய மாநிலங்களில் பாஜகவுக்கு எதிரான மக்கள் மனநிலை மற்றும் அதிருப்தி வாக்குகள் மிக அதிகமாக உள்ளன. இந்த வாக்குகள் அனைத்தும் இயல்பாகவே தேசிய அளவில் மாற்றுத் தலைமையாக உள்ள காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகளுக்கே சென்று சேரும்.

ஆனால், விஜய் திடீரென ‘தெற்கின் பிரதமர் வேட்பாளர்’ என்ற முழக்கத்தோடு உ.பி., பிகார் மற்றும் தென் மாநிலங்களில் தனியாகக் களம் இறங்கினால், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் தவெக மற்றும் காங்கிரஸுக்கு இடையே இரண்டாக உடையும். இவ்வாறு எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி சிதறும்போது, அது நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடியின் தேர்தல் வெற்றிப் பாதையை மிக எளிதாக்கிவிடும் என்பதை இடதுசாரிகளும் விசிகவும் சுட்டிக்காட்டுகின்றனர். பாஜகவை எதிர்ப்பதாகக் கூறிக்கொண்டு விஜய் செய்யும் இந்த அரசியல் நகர்வு, மறைமுகமாக பாஜகவிற்கே மிகப்பெரிய தேர்தல் பரிசாக மாறிவிடும் என்பது அவர்களது முக்கிய வாதமாக உள்ளது.

கூட்டணிக்குள் நிலவும் உச்சக்கட்ட குழப்பம்

அரசு அமைந்து குறுகிய காலத்திலேயே தவெகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே பொதுவெளியில் மோதல் வெடித்துள்ளது ஆளுங்கூட்டணியின் நிலைத்தன்மையையே கேள்விக்குறி

யாக்கியுள்ளது. விலைவாசி உயர்வு, மக்கள் நலத் திட்டங்கள் போன்றவற்றில் ஏற்கனவே இடதுசாரிகள் மற்றும் விசிக தரப்பில் அதிருப்திகள் நிலவி வரும் சூழலில், இந்தத் தேவையற்ற ‘பிரதமர் பதவி’ விவாதம் ஒட்டுமொத்தக் கூட்டணியின் எதிர்காலத்தையும் சீர்குலைப்பதாக அவர்கள் கருதுகின்றனர்.

எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி பாஜகவை வீழ்த்த வேண்டிய முக்கிய காலகட்டத்தில், தவெக தலைமை எடுத்துள்ள இந்த அவசர தேசியப் பாய்ச்சல் தேசிய நலனுக்கும் மதச்சார்பற்ற கூட்டணிக்கும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என விசிக மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் தங்களின் கவலையை வெளிப்படுத்தி வருகின்றனர்.

பாஜகவின் ஆபத்தைக் குறைக்க ஒன்றுபட்ட எதிர்க்கட்சி அணி தேவைப்படும் நேரத்தில், தவெகவின் இந்தத் தனி ஆவர்த்தனம் தமிழக ஆளுங்கூட்டணியை மட்டுமல்லாமல், தேசிய அளவிலான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையையும் உடைத்துவிடுமோ என்ற பதற்றம் தற்போது அரசியல் அரங்கில் தொற்றிக்கொண்டுள்ளது.