டெல்லி: கர்நாடகா அரசு தாக்கல் செய்த மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே தமிழ்நாடு எல்லையை ஒட்டியிருக்கும் மேகதாது பகுதியில் புதிய அணை கட்ட கர்நாடக அரசு முயற்சித்து வரும் நிலையில் அதற்கு தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதனிடையே மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2019ஆம் ஆண்டு கர்நாடக அரசு மத்திய அரசிடம் தாக்கல் செய்தது. ஆனால், அப்போதே விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்தது. தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையை திருத்தியோ அல்லது புதிய விரிவான திட்ட அறிக்கையோ தாக்கல் செய்யலாம் என மத்திய அரசு, கர்நாடகாவிடம் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட விரிவான திட்ட அறிக்கையில் புதிய கூறுகளை சேர்க்குமாறு கடந்த 2026 ஏப்ரல் 21ஆம் தேதி அன்று மத்திய நீர் ஆணையத்திற்கு கர்நாடக அரசு கடிதம் எழுதியுள்ளது. ஆனால், கர்நாடக அரசு கடிதத்தில் குறிப்பிட்டிருந்தவை காவிரி நடுவர் மன்றம் மற்றும் 2018 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முரணாக இருப்பதாக கூறி, அதை மீண்டும் கர்நாடக அரசுக்கே கடந்த ஜூன் 29ஆம் தேதி திருப்பி அனுப்பி வைக்கப்பட்டதாக மத்திய நீர் ஆணையம் தெரிவித்துள்ளது. 'பூவுலகின் நண்பர்கள்' அமைப்பு தாக்கல் செய்த RTI கேள்விக்கு அளித்த பதிலில், இத்திட்ட அறிக்கை கடந்த மாதமே நிராகரிக்கப்பட்டதாக ஆணையம் கூறியுள்ளது.
சிவனசமுத்திரம் நீர்மின் உற்பத்தி திட்டமும் மேகதாது அணை திட்டமும் ஒன்றோடொன்று இணைக்கும் வகையில் அமைந்திருப்பதே இந்த நிராகரிப்புக்கு காரணம். தேவையான திருத்தங்கள் செய்யப்பட்ட பிறகே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், திட்ட அறிக்கையில் தேவையான மாற்றங்கள் செய்து மீண்டும் சமர்ப்பிக்க கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.