மதுராந்தகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். முன்னதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், தி.மு.க. ஆட்சியை வழியனுப்ப தமிழக மக்கள் தயாராகி விட்டனர் என்று தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது,
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் பிரதமர் மோடி அவர்களே, தமிழகத்திற்கு தரவேண்டிய 3,458 கோடி ரூபாய் கல்வி நிதி எப்போது வரும்? தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்தின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்? பா.ஜ.க.வின் முகவர் போல் செயல்படும் கவர்னரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக் கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்? மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் வி.பி.ஜி. ராம் ஜி கைவிடப்படும் என்ற வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக இன்ச் இன்ச்-சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு அமைத்து வரும் மதுரை எய்ம்ஸ் எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்? இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்? ஓசூர் விமான நிலையம், கோவை, மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்? கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்? ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான நீட் விலக்கு எப்போது அமலுக்கு வரும்? தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போதுமே தோல்வியைத்தான் தரும். இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.