சென்னை: பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 94.
வயது மூப்பால் வரும் உடல்நல பிரச்னையால் அவதிப்பட்டு வந்த இவர் கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அவர் இன்று(ஆக., 21) மதியம் சுமார் 2 மணியளவில் மறைந்தார். 1952ல் 'வளையாபதி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் சவுகார் ஜானகி. பணம் படுத்தும் பாடு, புதிய பறவை, நீர்க்குமிழி, மகாகவி காளிதாஸ், எதிர் நீச்சல், இரு கோடுகள், உயர்ந்த மனிதன், காவிய தலைவி, ரங்க ராட்டினம், தில்லு முல்லு, வெற்றி விழா, ஹேராம் உள்ளிட்ட பல படங்களில் அவர் நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சந்தானம் நடிப்பில் வெளிவந்த 'பிஸ்கோத்' படம் தமிழில் அவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம். சவுகார் ஜானகி மறைவுக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சவுகார் ஜானகி மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பழம்பெரும் திரைப்பட நடிகையும், தனது தனித்துவமான நடிப்பால் பல தலைமுறை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தவர், திரைத்துறையில் 70 ஆண்டுகளுக்கும் மேலாகப் பயணித்து, எண்ணற்ற கதாபாத்திரங்களுக்கு உயிரூட்டிய அவரது கலைப்பணி என்றும் போற்றத்தக்கது சௌகார் ஜானகி மறைவு திரையுலகத்திற்கு பேரிழப்பு என்று தெரிவித்துள்ளார்.