சட்டமன்றத்தில் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலுரையில் பேசியதாவது,

சிக்கலான சூழலில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தது. ஆட்சி பொறுப்பேற்றதும் ஒருபுறம் மகிழ்ச்சி இருந்தாலும், மறுபுறம் கவலையும் இருந்தது. பின்னடைவில் இருந்த தமிழகம் மற்றும் ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆகியவற்றால் கவலையில் இருந்தேன். இப்போது தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளது. 5 ஆண்டுகள் கடந்த நிலையில், நான் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறேன். விடியலை அனைத்து வீடுகளும் பார்க்கின்றன.

2 லட்சம் பேருக்கு கலைஞர் இல்லம் வீடு கட்டுக் கொடுக்கப்பட்டுள்ளது. 4 ஆயிரம் கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது. 12 லட்சம் கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 1.35 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளன. மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பெண்களுக்கு ரூ.29 ஆயிரம் கிடைத்துள்ளது. அரசு ஊழியர்களின் 23 ஆண்டு கால கோரிக்கையை ஏற்று, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. விடியல் பயணம் மூலம் ஒவ்வொரு மகளிரும் ரூ. 60 ஆயிரம் சேமித்துள்ளனர்.

சாதனைக்கு மேல் சாதனை படைப்பதுதான் திராவிட மாடல் அரசு. இந்த அரசு பொறுப்பேற்று, 1,724 நாட்கள் ஆகிறது. 15,137 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். இதில் 8 ஆயிரம் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளேன். ஒவ்வொரு நாளும் மக்களுக்காகவே வாழ்ந்தேன். தி.மு.க. அரசின் சாதனைகளை எதிர்க்கட்சிகளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

கவர்னரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் நான், அவரின் உரைக்கு விளக்கம் அளிக்கும் சூழல் உள்ளது. ஒரே காரணத்தை திரும்ப திரும்ப கூறி சட்டசபையை விட்டு கவர்னர் வெளியேறி வருகிறார். கவர்னரின் செயல் வருத்தமளிக்கிறது. நாட்டின் மீதும், நாட்டுப்பண்மீதும் அளவற்ற மரியாதை வைத்திருப்பவர்கள்நாங்கள். யாரும் எங்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுக்க வேண்டாம். நாட்டுக்காக போராடியவர்கள் அவர்கள் இல்லை. சோதனைகள் எனக்கு புதியது அல்ல. சோதனைகளை கடந்து வென்றவன் நான். திராவிட மாடல் 2.0 ஆட்சியின் எங்களின் சாதனைகளை நாங்களே முறியடிப்போம். இவ்வாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசினார்.