சென்னை: தமிழகத்தில் அதிவீரிய கொரோனா தொற்று பரவுவதாக எந்தவித ஆதாரமும் இல்லை. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் அதிக ஆதிகாரபூர்வ தகவல்களை மட்டும் நம்ப வேண்டும் என்று மருத்துவத்துறை கூறியுள்ளது.


சமீபத்தில் கொரோனா நோய் தொற்று காரணமாக ஆந்திர மாநிலத்தில் இரு நபர்கள் உயிரிழந்ததாக, பத்திரிகைகளில் செய்தி வெளியாகியிருந்தது. இதனிடையே தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், கோவிட்-19 நோய்க்கான கண்காணிப்பு வழக்கமான முறையில் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், வழக்கமாக அறுவை சிகிச்சைகளுக்கு முன்னதாகவும் மற்றும் தீவிர சுவாச நோய்கள் சிகிச்சைக்கு பலனளிக்காத நோயாளிகளுக்கும், ஏனைய நோயாளிகளுக்கு வழக்கமாக கோவிட் தொற்று பரிசோதனை செய்வது நடைமுறையில் உள்ளது. அதன் அடிப்படையில், 2024ம் ஆண்டில் 990 பேருக்கும், 2025ஆம் ஆண்டில் 1,250 பேருக்கும், 2026ஆம் ஆண்டில் 335 பேருக்கும் கோவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 2,575 வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை அனைத்தும் வழக்கமான நோய் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; நோய்த் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டவை அல்ல. பதிவான பெரும்பாலான நோயாளிகளுக்கு லேசான அறிகுறிகள் மட்டுமே காணப்பட்டுள்ளன; நோயின் தீவிரம் அதிகரித்ததற்கான அல்லது வழக்கத்திற்கு மாறான மருத்துவ வெளிப்பாடுகளுக்கான எந்த ஆதாரமும் இல்லை.


இந்நிலையில் தேசிய வைராலஜி நிறுவனம், புனே-யில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் முடிவுகளின்படி, தற்போது பரவி வரும் வைரஸ் வகை லேசான நோய் வெளிப்பாட்டைக் கொண்டதாகவும், சமூகத்தில் குறைந்த அளவிலான பரவல் மட்டுமே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் தேவையற்ற அச்சமோ, பதற்றமோ அடைய வேண்டிய அவசியமில்லை. இருப்பினும், முதியவர்கள், கர்ப்பிணிகள், நீண்டகால உடல்நலக் குறைபாடுகள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருப்பின் அருகிலுள்ள அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் இருமல், தும்மல் ஒழுங்குமுறைகளை பின்பற்றுதல் போன்ற பொது சுகாதார வழிமுறைகளை தொடர்ந்து கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட கோவிட் -19 வைரஸ் வகை பரவி வருவதாக எந்த ஆதாரமும் இல்லை. கடந்த ஆண்டுகளை விட தற்போது கோவிட் தொற்று குறைவாகவே உள்ளது. பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை நிலைமையை தொடர்ந்து கண்காணித்து, தேவையான அனைத்து தடுப்பு மற்றும் சிகிச்சை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே பின்பற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்