தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழாவை ஒட்டி தொண்டர்களுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டுளளார். அந்த அறிக்கையில்,

தமிழக அரசியல் களத்தில் மக்களுக்கான முதன்மைச் சக்தியாகத் தமிழக வெற்றிக் கழகம் திகழ்கிறது. கழகத்தை நம் வெற்றித் தலைவர் அவர்கள் ஆரம்பித்து, இரண்டு ஆண்டுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன. தற்போது மூன்றாம் ஆண்டு தொடங்குகிறது. இந்த இரண்டு ஆண்டுகளாகத் தமிழக மக்களுக்கான நம் தலைவர் அவர்களின் முன்னெடுப்புகள். மிக முக்கியமானவை. ஆனாலும் நாம் கடந்து வந்த பாதை எவ்வளவு கடினமானது என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

தன் மீது பேரன்பு கொண்ட மக்களுக்காக, நம் தலைவர் அவர்கள் அத்தனைத் தடைகளையும் எதிர்கொண்டு இன்னும் தீவிரமாகக் களமாடி வருகிறார். நம் தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் இலக்கை நோக்கிய வெற்றிப் பயணத்தில் மேலும் அதிக ஈடுபாட்டுடன் தன்னை அர்ப்பணித்து கொண்டுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த இனிய தருணத்தைக் கொண்டாட உள்ளோம்.

நம் வெற்றித் தலைவர் தலைமையில் தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டுத் தொடக்க விழா, சென்னையில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சி, நமது கழகத் தலைமை நிலையச் செயலகத்தில், வரும் 2-ம் தேதி (02.02.2026, திங்கள் கிழமை) காலை 11.00 மணிக்கு நடைபெறுகிறது. இதை தலைவரின் ஒப்புதலோடு மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். மக்களுக்காக உழைத்து, மக்களுடன் மக்களாக இணைந்து நிற்போம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் விரோத ஆட்சியைத் தூக்கி எறிவோம். மாபெரும் வெற்றி பெற்று. நம் வெற்றித் தலைவர் தலைமையில் மனசாட்சி உள்ள மக்களாட்சியை அமைக்க உறுதி ஏற்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.