புதுடில்லி: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு வழக்கில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதி மோகனா விலகுவதாக அறிவித்துள்ளார்.
முந்தைய திமுக ஆட்சியில், டாஸ்மாக் மதுபான கொள்முதல், டெண்டர் முறைகேடு, சட்ட விரோதமாக பார் நடத்தியது, அதிக விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டு, பல கோடி ரூபாய் ஊழல் செய்யப்பட்டு உள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்பு துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு செந்தில் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளனர் என்பதற்கு முகாந்திரம் உள்ளதாகவும், எனவே, காவலில் வைத்து விசாரிக்க அவசியம் உள்ளதால், முன்ஜாமின் வழங்க முடியாது என்று உத்தரவிட்ட நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, டாஸ்மாக் முறைகேடு வழக்கில் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனுவை செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். மனுதாரரின் கோரிக்கையை ஏற்று தலைமை நீதிபதி சூர்யகாந்த், வழக்கை அவசர வழக்காக பட்டியலிட்டு, விசாரணைக்கு இன்று எடுத்துக்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் முன்ஜாமின் மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, அமர்வில் இருந்த மற்றொரு நீதிபதியான மோகனா வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஏற்கனவே செந்தில் பாலாஜி தொடர்பான வழக்கு விசாரணைகளில் அவர் வழக்கறிஞராக ஆஜராகி இருந்ததால், தற்பொழுது நீதிபதியாக தொடர்ந்தால் சரியாக இருக்காது எனக் கூறி, அவர் விலகினார். இதையடுத்து, புதிய அமர்வை இன்றைய தினமே அமைத்து மதியம் 1 மணிக்கு விசாரிப்பதாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் அறிவித்துள்ளார்.