தேசத்தின் முதன்மைத் தலைவரான மகாத்மா காந்தியின் வாழ்க்கை மற்றும் பாரம்பரியம், அமைதி, நீதி மற்றும் சுதந்திரத்திற்காக அவர் செய்த இறுதித் தியாகத்தையும் போற்றும் வகையில், இந்தியா அவரது நினைவு நாளை தியாகிகள் தினமாகக் கடைப்பிடிக்கிறது.
அதன்படி மகாத்மா காந்தியின் 78-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி டெல்லி ராஜ்காட்டில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட காந்தியின் நினைவிடத்தில் காலை முதலே தலைவர்கள் குவிந்தனர். அதன்படி, நேற்று காலை ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் ஜனாதிபதி திரௌபதி முர்முவும் மரியாதை செலுத்தினர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் தள பதிவில், தேசத்தந்தை மகாத்மா காந்தியின் நினைவு நாளில் அவருக்கு எனது வணக்கங்கள். அவர் எப்போதும் சுதேசி கொள்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தார். இதுவே வளர்ந்த மற்றும் தற்சார்பு கொண்ட இந்தியாவிற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாகவும் உள்ளது. அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க எப்போதும் ஊக்குவிக்கும், இவ்வாறு அவர் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.