தேனி, செப். 16-

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர் செல்வத்திற்கு வழங்கப்பட்டு வந்த ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டதை அடுத்து தற்போது எக்ஸ் பிரிவு பாதுகாப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் தற்போது வரை ஓ பன்னீர் செல்வத்துக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் மூன்று முறை முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம். இவருக்கு கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதிமுகவில் உள்கட்சி பூசல் ஏற்பட்டதையடுத்து, தர்மயுத்தம் தொடங்கினார். அப்போது முதல் அவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்தது.

மத்திய உள்துறை அமைச்சகம், முக்கிய பிரமுகருக்கு உள்ள அச்சுறுத்தல்களை மதிப்பிட்டு இசட் பிளஸ், இசட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் என பல்வேறு பிரிவுகளில் பாதுகாப்பினை வழங்கி வருகிறது. அந்த வகையில், ஓ பன்னீர் செல்வத்திற்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு இதுநாள் வரையும் வழங்கப்பட்டு வந்தது.

ஒய் பிளஸ் பாதுகாப்பின் படி, தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த நான்கு வீரர்கள் பாதுகாப்பு அளிப்பர். வீட்டில் 6 காவலர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஒ பன்னீர் செல்வத்திற்கு கடந்த 9 ஆண்டுகளாக ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அவருக்கான பாதுகாப்பு எக்ஸ் ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எக்ஸ் பிரிவு பாதுகாப்பில் மொத்தம் ஆயுதம் ஏந்திய 2 காவலர்கள் சுழற்சி முறையில் பணியில் இருப்பார்கள். எக்ஸ் பிரிவு பாதுகாப்பின் கீழ் வரும் முக்கிய பிரமுகர்களுக்கு கமாண்டோக்கள் பாதுகாப்பு இருக்காது. சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுகவில் இணைந்த ஓ பன்னீர்செல்வம் போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக உள்ளார். இந்த நிலையில்தான், ஓ பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு எக்ஸ் பிரிவாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக முன்னாள் முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டு வந்த இசட் பிளஸ் பாதுகாப்பு, இசட் பாதுகாப்பாக குறைக்கப்பட்டு இருந்தது. இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ் சுமார் 50 கமாண்டோ மற்றும் சிறப்புப் பிரிவு போலீசார் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். இசட் பிரிவு பாதுகாப்பின் கீழ் மொத்தம் 22 காவலர்கள் வரை பணியில் இருப்பார்கள்.