மதுரை, செப். 16-

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி மாவட்டச் செயலாளர் மருதுபாண்டியன் மற்றும் தவெக எம்எல்ஏ கல்லாணை, தங்கப்பாண்டி ஆகியோருக்கு இடையில் மோதல் வெடித்துள்ளது.

அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரின் ஆதரவு இருப்பதால், மாவட்டத்தின் பல்வேறு விவகாரங்களிலும் மருதுபாண்டியனின் தலையீடுகள் இருப்பதாக முனுமுனுக்கப்பட்டு வருகின்றன.

மதுரையில் தவெக 8 தொகுதிகளை கைப்பற்றியுள்ள நிலையில், பொறுப்பு அமைச்சராக சிடிஆர் நிர்மல்குமார் இருந்து வருகிறார். இன்னொரு அமைச்சராக காங்கிரஸ் எம்எல்ஏ விஸ்வநாதன் இருக்கிறார். இதனால் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி ஆகியோருக்கு அமைச்சரவை வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் இரு தரப்புமே அதிருப்தியில் இருந்து வருகிறது.

இதனால் உள்ளாட்சித் தேர்தலில் தமது ஆதரவாளரை மேயராக கொண்டு வந்துவிட வேண்டும் என்று கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி தரப்பு முயன்று வருகிறது. ஆனால் அமைச்சர் சிடிஆர் நிர்மல்குமாரோ, தனது தீவிர ஆதரவாளரான மருதுபாண்டியன் பெயரை தான் முதல் நிலை பட்டியலில் வைத்திருக்கிறார்.

ஏனென்றால் தனக்காக திருப்பரங்குன்றம் தொகுதியை மருது பாண்டியன் விட்டுக் கொடுத்தார் என்ற செண்டிமெண்ட் தான். இதன் காரணமாகவே சிடிஆர் நிர்மல்குமார் எங்கு சென்றாலும், மருது பாண்டியனையும் அழைத்து செல்கிறார். அண்மையில் தலைமைச் செயலகத்திற்கும் கூட நிர்மல்குமாருடன் மருது பாண்டியன் வந்திருந்தார். இதனால் மருதுபண்டியன் மூலமாகவே சிடிஆர் நிர்மல்குமாரை அணுக முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது.

இதனால் கவுன்சிலர் சீட் கேட்டு காய் நகர்த்தும் பல்வேறு தரப்பினரும் மருதுபாண்டியனை அணுகி வருகின்றனர். ஏற்கனவே மதுரையில் தவெக தரப்பில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம் பெறப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த தொண்டர்கள் பலரும் அதிருப்தியில் இருந்தனர். தற்போது மருதுபாண்டியன் திருப்பரங்குன்றம் தொகுதி மட்டுமல்லாமல் மதுரை மாவட்டத்தின் பல்வேறு விவகாரங்களிலும் தலையீடு செய்வதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அதனை சிடிஆர் நிர்மல்குமாரும் கண்டுகொள்வதில்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் அமைச்சர் கனவில் இருக்கும் கல்லாணை மற்றும் தங்கப்பாண்டி இருவருமே புஸ்ஸி ஆனந்திடம் இதுதொடர்பாக தொடர்ந்து புகார் அளித்து வருகின்றனர். இதனால் உள்ளாட்சித் தேர்தல் நெருங்கும் போது மதுரை தவெகவில் உட்கட்சி மோதல் உச்சத்தில் இருக்கும் என்று தவெகவினர் மத்தியில் முனும்னுக்கப்பட்டு வருகிறது.