சென்னை, செப்.6-
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், 47 தொகுதிகளில் அ.தி.மு.க வெற்றிபெற்ற நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு எதிராகப் பெரும் கிளர்ச்சி வெடித்தது. தேர்தல் தோல்விக்குப் பொறுப்பேற்கச் சொல்லி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, சி.வி.சண்முகம், கே.பி.அன்பழகன் உள்ளிட்ட சீனியர்கள் போர்க்கொடி உயர்த்தினர். இந்தக் களேபரங்களுக்கு இடையே, அ.தி.மு.க-வைச் சேர்ந்த ஆறு எம்.எல்.ஏ-க்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க-வுக்குத் தாவவும், அ.தி.மு.க கலகலத்துப்போனது.
சட்டமன்றத்துக்குள் பழனிசாமிக்கு நன்றி சொல்வதும், அவரைப் புகழ்வதுமாக வேலுமணியும் சி.வி.சண்முகமும் செயல்பட்டாலும், அ.தி.மு.க-வுக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் சட்டமன்ற அறைக்குள் கிளர்ச்சியில் ஈடுபடும் 15 எம்.எல்.ஏ-க்கள் இன்றுவரை செல்லவில்லை. ‘கட்சியிலிருந்து பிரிந்து சென்றிருக்கும் சசிகலா, டி.டி.வி.தினகரன் உள்ளிட்டவர்களை மீண்டும் அ.தி.மு.க-வில் இணைக்க வேண்டும். தேர்தல் தோல்விக்கு பழனிசாமியே பொறுப்பேற்க வேண்டும்’ என்பதில் உறுதியாகவே இருக்கிறது வேலுமணி தலைமையிலான டீம்.
‘கூட்டத்தொடர் முடிந்ததும் உட்கட்சிப் பிரச்னை மீண்டும் வெடிக்குமோ... பொதுக்குழுவைக் கூட்டச் சொன்னால் என்ன செய்வது?’ என பழனிசாமி தரப்பு அரண்டுகிடக்கும் சூழலில்தான், அ.ம.மு.க-வை அ.தி.மு.க-வுடன் இணைப்பது குறித்து சமீபத்தில் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது. தினகரனுடன் வேலுமணி தரப்பினர் நேரில் பேசியதாகச் சொல்கின்றன விவரமறிந்த வட்டாரங்கள்.