சென்னை: சென்னையில் வரலாற்றுச் சிறப்புமிக்க புனித ஜார்ஜ் கோட்டையில் பல தலைமுறைகளாக இயங்கி வரும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டமன்றப் பேரவையை வேறு இடத்திற்கு மாற்றும் முக்கிய அறிவிப்பை, முதல்வர் சவிஜய் சட்டமன்ற விதி 110-ன் கீழ் நடப்பு கூட்டத்தொடரிலேயே வெளியிட உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம் (35 ஏக்கர்), பட்டினப்பாக்கம் மற்றும் நந்தம்பாக்கம் ஃபின்டெக் சிட்டிக்கு எதிரே உள்ள 20 ஏக்கருக்கும் அதிகமான நிலம் ஆகிய மூன்று இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசீலனையில் வைக்கப்பட்டுள்ளன. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவின் உத்தரவின் பேரில் அரசு அதிகாரிகள் இந்த இடங்களை ஆய்வு செய்து முடித்துள்ளனர்.
ஆனால், இந்த மூன்று இடங்களில் நந்தம்பாக்கம் பரிசீலிக்கப்படுவதே தற்போது தொழில் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் மத்தியில் கடுமையான கவலையையும் விவாதத்தையும் கிளப்பியுள்ளது.
ஃபின்டெக் சிட்டி திட்டத்திற்கு விழும் பேரிடி
சென்னை நந்தம்பாக்கம் பகுதி, சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், நிதிச் சேவை அமைப்புகள் மற்றும் பன்னாட்டுத் தரவு மையங்களை ஈர்க்கும் பிரம்மாண்டமான ஃபின்டெக் சிட்டி திட்டத்தின் முக்கிய மையமாக அடையாளம் காணப்பட்ட ஒன்று. ஏற்கனவே முதல் கட்டப் பணிகள் முழு வீச்சில் முடிக்கப்பட்டு வரும் நிலையில், அடுத்தகட்ட விரிவாக்கப் பணிகளுக்கான நிலமாகவே நந்தம்பாக்கத்தின் பிரதான நிலப்பரப்புகள் திட்டமிடப்பட்டிருந்தன.
இந்த நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் உலகளாவிய முதலீடுகளையும் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கான உயர்தர ஐடி வேலைவாய்ப்புகளையும் உருவாக்கக்கூடிய ஒரு வணிக வளாகப் பகுதியைத் தலைமைச் செயலக வளாகமாக மாற்றுவது, சென்னையின் எதிர்கால வளர்ச்சிக்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தும். மெட்ரோ ரயில் இணைப்பு, விமான நிலைய நெருக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு திட்டமிடப்பட்ட ஒரு வணிக மையத்தை அரசு நிர்வாக அலுவலகமாக மாற்றுவது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அடியோடு சிதைத்துவிடும்.
சென்னையின் வளர்ச்சித் திட்டங்களுக்குத் தொடர் முட்டுக்கட்டையா?
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதில் இருந்தே, சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வந்த பல்வேறு முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களை நிறுத்தி வைப்பது அல்லது மறுபரிசீலனை செய்வது போன்ற நடவடிக்கைகள் தொடர் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.
பரந்தூர் பசுமை விமான நிலைய விவகாரம் முதல் பல முக்கிய பொருளாதார வழித்தடங்கள் வரை திட்டங்கள் முடங்கிப் போயுள்ள நிலையில், தற்போது நந்தம்பாக்கத்தின் முதலீட்டு நிலத்தையும் நிர்வாக பயன்பாட்டுக்குத் திருப்புவது நியாயமற்றது என்ற விமர்சனம் எழுந்துள்ளது.
புனித ஜார்ஜ் கோட்டையில் இடப்பற்றாக்குறை நிலவுவதும், அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை நெரிசலில் பணிபுரிவதும் உண்மைதான். அதற்காகத் தலைமைச் செயலக இடமாற்றம் தேவைப்படலாம்; ஆனால் அதற்காகத் தொழில் வளர்ச்சிக்கும் சர்வதேச நிதி மையத்திற்கும் ஒதுக்கப்பட்ட நந்தம்பாக்கம் போன்ற வணிக முக்கியத்துவம் வாய்ந்த பகுதியைப் பலிகடா ஆக்குவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
கிண்டியில் உள்ள 35 ஏக்கர் நிலமோ அல்லது பட்டினப்பாக்கமோ மாற்றுத் தீர்வாக இருக்கும்போது, தொழில் துறையின் எதிர்காலத்தை முடக்கும் நந்தம்பாக்கம் தேர்வை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும் என்பதே பொருளாதார நிபுணர்களின் கருத்தாக உள்ளது. உலக முதலீடுகளை ஈர்த்து வரும் சென்னைக்குத் தேவை தொழில் விரிவாக்கமே தவிர, வாய்ப்புகளை முடக்கும் திட்டமிடுதல்கள் அல்ல!