சென்னை: சென்னை அடையாறில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி அழகிரிக்கு சொந்தமான கட்டிடத்தில் எஸ்.பி.ஐ. வங்கி செயல்பட்டு வருகிறது. இன்று காலை அந்த கட்டிடத்தின் லிப்ட் பழுதடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து வங்கி கிளை மேலாளர் கயல்விழி அழகிரியின் உதவியாளரை தொடர்பு கொள்ள முயன்றுள்ளார். ஆனால் அவர் பதிலளிக்காததால், இதுகுறித்து கயல்விழி அழகிரியிடம் புகார் கூறியுள்ளார். இந்நிலையில், வங்கிக்கு நேரில் வந்த கயல்விழி அழகிரிக்கும், வங்கி மேலாளருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கயல்விழி, மேலாளரின் கன்னத்தில் அறைந்தார் இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. இதனிடையே, சம்பவம் குறித்து அடையாறு போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகார் குறித்து இருதரப்பினரிடையே விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.