இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கியின் கீழ் செயல்பட கூடிய எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் ஐபிஓ பங்குச்சந்தை முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய சொத்து மேலாண்மை நிறுவனமாக எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் ஐபிஓ வெளியிடுகிறது. சில்லறை முதலீட்டாளர்கள் இன்று முதல் 16ஆம் தேதி வரை ஐபிஓ மூலம் பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்யலாம். எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட் நிறுவனம் 9,813 கோடி ரூபாய் மதிப்பிலான ஐபிஓ வெளியிடுகிறது.ஒரு பங்கிற்கு 545 முதல் 574 ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்துள்ளது. சில்லறை முதலீட்டாளர்கள் ஒரு லாட்டிற்கு 26 பங்குகள் வீதம் விண்ணப்பிக்க வேண்டும்.


குறைந்தபட்சம் 14,170 ரூபாய் செலுத்தப்பட வேண்டும். இந்த நிறுவன பங்கு ஜூலை 21 அன்று பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட உள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனமான எஸ்பிஐ ஃபண்ட்ஸ் மேனேஜ்மென்ட், மார்ச் 31 நிலவரப்படி 12.51 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்துக்களை நிர்வகிக்கும் திறனை கொண்டுள்ளது. இந்த ஐபிஓ, நடப்பு ஆண்டில் இந்திய பங்குச் சந்தையில் வெளியாகும் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. கடந்த ஆண்டில் மட்டும் இந்நிறுவனம் 4,389 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ளது, இது முந்தைய ஆண்டை விட 1000 கோடி ரூபாய் அதிகம். அதுமட்டுமில்லாமல் 3000 கோடி ரூபாய் லாபம் பெற்றுள்ளது. ஐபிஓ வெளியீட்டிற்கு முன்னதாக, ஆங்கர் முதலீட்டாளர்கள் மூலம் இந்நிறுவனம் 2,663 கோடி ரூபாயை திரட்டியுள்ளதால் சந்தையில் இந்த பங்கினை வாங்க பலரும் போட்டி போடுகின்றனர்.ஐபிஓ வெளியீட்டிற்கு முன்பே, 129 ஆங்கர் முதலீட்டாளர்களுக்கு 4.63 கோடி பங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஒரு பங்கு விலை 574 ரூபாய் என்ற விலைக்கு வழங்கப்பட்டுள்ளது.


ஜிஐசி , அபுதாபி முதலீட்டு ஆணையம் , பிளாக்ராக், கோல்ட்மேன் சாக்ஸ், பிடிலிட்டி போன்ற உலகளாவிய நிறுவனங்களும், எல்ஐசி , ஹெச்டிஎஃப்சி மியூச்சுவல் ஃபண்ட், ஐசிஐசிஐ புருடென்ஷியல் மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் நிப்பான் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் போன்ற முன்னணி உள்நாட்டு நிறுவனங்களும் இந்த பங்கினை போட்டி போட்டு வாங்கியுள்ளன. இது முழுக்க முழுக்க 'ஆஃபர் ஃபார் சேல்' முறையில் நடக்கும் ஒரு பங்கு வெளியீடு என்பதால் புதிய பங்குகள் ஏதும் வெளியிடப்படவில்லை. தற்போதைய பங்குதாரர்களான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் பிரான்ஸை சேர்ந்த அமுண்டி ஆகிய நிறுவனங்கள் தங்களின் பங்குகளை விற்கின்றன.எஸ்பிஐ தனது 6.3 சதவீத பங்குகளையும், அமுண்டி தனது 3.7 சதவீத பங்குகளையும் விற்பனை செய்கின்றன.ஐபிஓ-விற்கு பின் இந்த நிறுவனத்தில் எஸ்பிஐ-யின் பங்கு அளவு 61.76 சதவீதத்திலிருந்து 55.46 சதவீதமாகவும், அமுண்டியின் பங்கு இருப்பு 32.56 சதவீதமாகவும் குறையும்.