சென்னை, செப்.3-

மின்வாரியத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப உள்ளதாக சட்டசபையில் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் கூறிய நிலையில், ஏற்கனவே தேர்ச்சி பெற்று பணி நியமனம் செய்யப்படாதவர்களை, மீண்டும் தேர்வு இல்லாமல் நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானதையடுத்து பனையூரில் உள்ள தவெக அலுவலக பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மின்வாரிய பணிக்காக கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் சுமார் 9,000 நபர்கள் தேர்ச்சி பெற்ற நிலையில் அதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நபர்களுக்கு பணி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அண்மையில், சட்டசபையில் மின்சார துறை அமைச்சர் மின்வாரியத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்ப உள்ளதாக கூறியிருந்தார்.

இதனால், மின்வாரிய பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு தேர்ச்சி பெற்றவர்களை மீண்டும் தேர்வு இன்றி ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களையே பணியில் அமர்த்த வேண்டும் என தேர்ச்சி பெற்றவர்கள் கோரிக்கை வைத்து இருக்கிறார்கள். இந்த நிலையில், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற இருப்பதாக தகவல் வெளி

யானது. இதையடுத்து, தவெக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பனையூர் பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. பள்ளிக்கரணை காவல் துணை ஆணையர் ரகுபதி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தவெக அலுவலகம் வழியாக செல்லும் சாலைகளில் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வழியாக வரும் வாகனங்கள் மற்றும் மக்களிடம் எங்கு செல்கிறார்கள் என்று விவரங்களை கேட்ட பிறகே போலீசார் அனுமதித்ததையும் பார்க்க முடிந்தது. தமிழக சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. முதல்வர் விஜய்யும் இன்று மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக நீர் திறந்துவிடும் நிகழ்ச்சிக்காக சேலம் சென்றுள்ள நிலையில், சென்னையில் உள்ள தவெக அலுவலகம் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தூய்மை பணியாளர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம், ஊதிய உயர்வு கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் உள்ள ரிப்பன் பில்டிங் கட்டிட வளாகத்தில் தூய்மை பணியாளர்களின் தொடர் போராட்டம் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.