சென்னை: சட்டசபையில் தொகுதி மறுவரையறை விவாதத்தின் போது அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக வேண்டும் என்று பேசி இருந்தார்.
இதன்பின் அமைச்சர் கில்லி சரத்குமார், இந்தியாவின் நாளைய பிரதமர் விஜய் என்று பேசி இருந்தார். இதன்பின் அமைச்சர்கள் ஜெகதீஸ்வரி தொடங்கி தவெக எம்எல்ஏ-க்கள் அனைவரும் அடுத்த பிரதமர் விஜய் என்ற கோஷத்தை முன்னெடுத்தனர்.
இதன்பின் இந்தியா டுடே கருத்துக்கணிப்பில் பிரதமர் வேட்பாளருக்கான ரேஸில் விஜய் 9% ஆதரவுடன் 3வது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. விஜய்க்கு தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் வடகிழக்கு மாநிலங்களில் அதிக ஆதரவு இருப்பதாக கூறப்பட்டது. அதற்கேற்ப விஜய்யின் ஒவ்வொரு பேச்சும், அறிவிப்பு வட மாநிலங்களில் உள்ள மொழிகளில் டப் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிடப்பட்டன.
அதேபோல் வட இந்திய இன்ஸ்டாகிராம் இன்ஃபுளூயன்சர்களை வைத்து பல்வேறு வதந்திகளை தவெக பரப்பி வருகிறது. இந்த விவகாரம் காங்கிரஸ் கட்சியினரை ஆவேசம் அடைய வைத்துள்ளது. ஏனென்றால் தவெக ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. விஜய் முதல்வராக பொறுப்பேற்ற விழாவில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
தவெகவுக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்ததோடு, அடுத்து வரும் உள்ளாட்சி மற்றும் லோக்சபா தேர்தல்களிலும் காங்கிரஸ் கூட்டணி அமைப்பதாக அறிவித்தது. ஆனால் திடீரென பிரதமர் வேட்பாளராக விஜய்யை அக்கட்சியினர் முன்னிறுத்தி வருகின்றனர். விஜய் உடனான கூட்டணியால் தமிழ்நாடு மட்டுமல்லாமல், கர்நாடகா, தெலங்கானா மற்றும் கேரளத்திலும் ஸ்வீப் செய்ய முடியும் என்று நம்பிக்கையுடன் இருந்தது.
ஆந்திரா பிரதேசத்தில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் விஜய் இடையில் இருக்கும் நட்பை பயன்படுத்தி கொள்ள முடியும் என்று காங்கிரஸ் கட்சி கணக்கு போட்டிருந்தது. ஆனால் திடீரென விஜய் முன்னிறுத்தப்படுவதால், பாஜக ஹேப்பி மோடில் உள்ளது. ஏனென்றால் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள இளைஞர்கள் எழுச்சியால் பாஜகவுக்கு வடமாநிலங்களில் பின்னடைவு அதிகரித்து வருகிறது.
இதனை சரிகட்ட தென்னிந்திய மாநிலங்களில் கூடுதல் எண்ணிக்கையில் சீட்களை வெல்ல வேண்டிய தேவை இருந்தது. ஆனால் ஆந்திராவை தவிர்த்து தென்னிந்திய மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியும், காங்கிரஸ் கூட்டணி ஆட்சியும் தான் நடக்கிறது. இப்படியான சூழலில் தமிழ்நாட்டில் விஜய் பிரதமர் ரேஸில் குதிக்க தனித்து போட்டியிட்டால், அது அதிமுக - பாஜக கூட்டணிக்கு சாதகமாக முடியும்.
அதேபோல் ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிகளுடனும் விஜய் பேச வாய்ப்புள்ளது. ஏற்கனவே வாரிசு படத்தில் நடிக்க ஐதராபாத் வந்த போது சந்திரசேகர் ராவை விஜய் சந்தித்திருக்கிறார். இதனால் தென்னிந்தியாவில் மும்முனை போட்டி ஏற்படும். மும்முனை போட்டி என்று வரும் போது, அது பாஜகவுக்கு சாதகமாக அமையவே அதிக வாய்ப்புகள் உள்ளது.
கேரளத்திலும் விஜய் தனது கட்சியை விரிவாக்க ஆயத்தமாகி வருகிறார். பாஜகவில் இருக்கும் நிர்வாகிகள் பலரும் விஜய் பக்கம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக சொல்லப்படுகிறது. கேரளத்தில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில், தமிழ்நாட்டை போல் அங்கும் மேஜிக் நடந்தால், பாஜக 4வது முறையாக மத்தியில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவே பார்க்கப்படுகிறது.