லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று மாநிலம் முழுதும், 35 தாலுகா அலுவலகங்களில் திடீர் சோதனை நடத்தினர். சென்னையில், வேளச்சேரி, பெரம்பூர், கடலுார் மாவட்டம், சிதம்பரம் தாலுகா அலுவலகத்தில் சோதனை நடந்தது.
* திருவாரூர் தாசில்தார் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 43,000 ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
* மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகா அலுவலகத்தில், தாசில்தார் ராஜரத்தினம், அவரது கார் ஓட்டுநர், இரண்டு வி.ஏ.ஓ.,க்களிடம், 42,750 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் தாலுகா அலுவலகத்தில், 22,600 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில், தாசில்தார், கலெக்டர் அலுவலகத்திற்கு சென்ற நிலையில், அங்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி, 34,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.
* திருநெல்வேலி மாவட்டம், திசையன்விளை தாலுகா அலுவலகத்தில் நடந்த சோதனையில், 32,200 ரூபாய், தென்காசி தாலுகா அலுவலகத்தில் 15,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
ஒட்டுமொத்த சோதனையில், 13.78 லட்சம் ரூபாய் ரொக்கமாக சிக்கியது. ஆன்லைன் பண பரிவர்த்தனை செயலியான ஜிபே மூலம் 68.32 லட்சம் ரூபாய் கணக்கில் வராத பணம் பெறப்பட்டது தெரியவந்தது. இதில், கரூரில் அதிகபட்சமாக, 16.33 லட்சம் ரூபாய், திருச்சியில், 12.40 லட்சம் ரூபாய் ஜிபே மூலம் பெறப்பட்டுள்ளது.