சென்னை, செப்.5-

சென்னை நகரின் மிக முக்கிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் ஒன்றான சென்னை துறைமுகம் - மதுரவாயல் ஈரடுக்கு பறக்கும் சாலைத் திட்டம் மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

2011-ல் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசால் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் திட்டம் மாற்றப்பட்டு மீண்டும் தொடங்கப்பட்டது.

அதிமுக ஆட்சியில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டிருந்த சுமார் 50 தூண்கள் கடந்த 16 ஆண்டுகளாக எவ்வித பயன்பாடும் இன்றி கைவிடப்பட்ட நிலையில் நின்றன. தற்போது அந்தப் பழைய தூண்களுக்குப் புதிய வடிவம் கொடுக்கப்பட்டு, திட்டப்பணிகள் முழுவீச்சில் வேகம் எடுத்துள்ளன.

பழைய தூண்களுக்குப் புதிய பலம்

2010-ம் ஆண்டு வாக்கில் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் மையப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்தத் தூண்களின் மீது, மதுரவாயல் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தற்போது எட்டு கார்டர்களை (Girders - கிடைமட்ட தாங்கு பாலங்கள்) வெற்றிகரமாகப் பொருத்தியுள்ளது. இதன் மூலம் ₹5,885 கோடி மதிப்பிலான இந்த பிரம்மாண்ட திட்டம் மீண்டும் உயிர்பெற்றுள்ளது.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஏற்கெனவே அமைக்கப்பட்டிருந்த தூண்களின் அடித்தளம் மிகவும் வலுவாகவே உள்ளது. எனவே, உறுதித்தன்மை மாறாத தூண்களை ஆய்வு செய்து, வெளிப்புறத்தில் கூடுதல் எஃகு மற்றும் கான்கிரீட் அடுக்குகளைக் கட்டமைத்து அவற்றைப் பலப்படுத்தியுள்ளோம். பின்னர் அவற்றுக்கு வர்ணம் பூசப்பட்டு, 4 வழிச் சாலைக்கான கார்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன” என்றார்.

12 தூண்கள் இடிப்பு; எஞ்சியவை புதுப்பிப்பு

சுமார் 100-க்கும் மேற்பட்ட பழைய தூண்களில் உறுதித்தன்மை குறைந்த சுமார் 12 தூண்கள் மட்டும் முழுமையாக இடிக்கப்பட்டன. மீதமுள்ள தூண்கள் கோயம்பேடு வரை படிப்படியாகப் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. பல இடங்களில் கார்டர்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்த பகுதிகள், மாநில நெடுஞ்சாலைத் துறையிடம் வாகனப் போக்குவரத்துக்காக மீண்டும் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.

இப்பறக்கும் சாலையில் மிகப்பெரிய அளவிலான முன்வார்க்கப்பட்ட பெட்டி வடிவ கான்கிரீட் கார்டர்கள் பயன்படுத்தப்பட்டு, அதிநவீன தொழில்நுட்பத்தில் பாலத்தின் தளம் அமைக்கப்பட்டு வருகிறது.

கூவம் ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நிலப்பரப்பில் இருந்து கூவம் ஆற்றுக்குள் பறக்கும் சாலை நுழையும் பகுதியான பாடி ரயில் நகரில், ஆற்றங்கரையோரம் இருந்த ஏராளமான ஆக்கிரமிப்புகளைத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அகற்றியுள்ளது. இங்கிருந்து 5 கி.மீ நீளத்துக்கு கூவம் ஆற்றின் மீதே ஈரடுக்கு (Double-decker) மேம்பாலமாக இது துறைமுகம் வரை பயணிக்கிறது.

மேற்கு சென்னை புறநகர்ப் பகுதிகளில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் தொடக்கப் புள்ளியை மதுரவாயலிலிருந்து வானகரத்திற்கு அப்பால் வரை நெடுஞ்சாலை ஆணையம் நீட்டித்துள்ளது.

இரு அடுக்குகள்: யாருக்கு என்ன பலன்?

இந்த பிரம்மாண்ட வழித்தடம் இரண்டு தளங்களாகச் செயல்படும்:

கீழ் அடுக்கு : பொதுமக்களின் உள்ளூர் போக்குவரத்துக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு முதல் நேப்பியர் பாலம் வரை 13 இடங்களில் ஏறும், இறங்கும் பாதைகள் அமைக்கப்படுகின்றன. சிவானந்தா சாலை, கல்லூரி சாலை, ஸ்பர்டேங்க் சாலை மற்றும் கோயம்பேடு ஆகிய முக்கிய சந்திப்புகளில் வாகனங்கள் ஏறி இறங்க முடியும்.

மேல் அடுக்கு : துறைமுகத்திற்கான கனரக வாகனங்களுக்காகப் பிரத்யேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இடையில் எங்கும் ஏறும், இறங்கும் பாதைகள் கிடையாது. மதுரவாயலிலிருந்து புறப்படும் கண்டெய்னர் லாரிகள், நகரின் எந்தவொரு போக்குவரத்து நெரிசலிலும் சிக்காமல் நேரடியாக சென்னை துறைமுகத்தின் 10-வது நுழைவு வாயிலை அடைய முடியும்.

பணிகளில் உள்ள சவால்

மழைக்காலம் மற்றும் வெள்ள அபாயக் காரணங்களால், கூவம் ஆற்றுப் பகுதியில் செப்டம்பர் முதல் பிப்ரவரி வரையிலான 6 மாதங்கள் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதனால் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் மட்டுமே பணிகள் நடைபெற முடிகிறது.

கூவம் ஆற்றில் பருவமழைக் காலத்திலும் தடையின்றி பணிகளைத் தொடர ஏதுவாக, மாற்று வெள்ளத் தடுப்பு மற்றும் நீர் வடிகால் நடவடிக்கைகளைத் தமிழக அரசு துரிதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் தேசிய நெடுஞ்சாலை ஆணையப் பொறியாளர்கள் முன்வைத்துள்ளனர். இந்தச் சவால்கள் கடக்கப்படும் பட்சத்தில், பல ஆண்டுகளாகத் தாமதமான இத்திட்டம் விரைந்து முடிந்து சென்னை மாநகரப் போக்குவரத்து நெரிசலுக்குப் பெரும் தீர்வாக அமையும்.