கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் வியாழக்கிழமை (16-ம் தேதி) அனுசரிக்கப்பட்டது.


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் காசிராமன் தெருவில் அமைந்திருந்த ஸ்ரீ கிருஷ்ணா உதவி பெறும் தொடக்கப் பள்ளியில்,கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 16-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தில் 94 குழந்தைகள் தீயில் கருகி உயிரிழந்தனர். மேலும், 18 குழந்தைகள் படுகாயமடைந்தனர். இந்த தீவிபத்தில் உயிரிழந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. இதையடுத்து, காசிராமன் தெருவில் தீ விபத்து நிகழ்ந்த பள்ளி முன் குழந்தைகளை இழந்த பெற்றோர்கள் சார்பில் நினைவஞ்சலி கூட்டமும், பாலக்கரையில் உள்ள நினைவு மண்டபத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலியும் செலுத்தினார். தங்களது உயிரிழந்த குழந்தையின் உருவப்படத்தை பார்த்த தாய்மார்கள் அவர்களுக்கு பிடித்த தின்பண்டங்களை வைத்து கதறி அழுதனர். தீ விபத்தில் இறந்த 94 குழந்தைகளின் 22-ம் ஆண்டு நினைவு தினத்தை வெளிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தைகளின் படங்கள் அடங்கிய டிஜிட்டல் பதாதை சம்பவம் நடந்த பள்ளி முன் வைக்கப்பட்டது. இதற்கு பெற்றோர்கள், அரசியல் கட்சியினர்கள், பொதுமக்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள் உள்ளிட்டோர், மலர் வளையம் வைத்து, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். மாலையில் மகாமககுளத்தில் மோட்ச தீபம் ஏற்றப்பட உள்ளது.


இதில் திமுக தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான சாக்கோட்டை க.அன்பழகன், திமுக முன்னாள் அமைச்சரும், திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி. செழியன், முன்னாள் எம்பி ராமலிங்கம், கும்பகோணம் மாநகராட்சி மேயர் சரவணன், மாநகராட்சி துணை மேயர் தமிழழகன், மாநகராட்சி ஆணையர் சுதா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பாரதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சின்னை பாண்டியன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் குமரன், மாநகரத் தலைவர் மிர்சாவுதீன், தமிழக வெற்றி கழக மாநகர செயலாளர் முருகானந்தம், மாணவர் அரண் அமைப்பு தமிழ்நாடு தலைவர் சைமன் உள்ளிட்ட அதிகாரிகள், அலுவலர்கள், அதிமுக உள்பட பல்வேறு கட்சியினர் மரியாதை செலுத்தினர்.