கிளாஸ்கோ: 23-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உள்ள ஓவோ ஹைட்ரோ மைதானத்தில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை கோலாகலமாக தொடங்கியது. தொடக்க விழாவானது இசை மற்றும் ஸ்காட்லாந்து பாரம்பரியப் பெருமைகள் நிறைந்த வண்ணங்களின் கலவையாக மாறியிருந்தது.
பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் அரசி கமிலா ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர். மூன்றாம் சார்லஸ் போட்டிகளை முறைப்படி தொடங்கி வைத்தார். கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டில் 74 நாடுகளைச் சேர்ந்த 3 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடக்க விழாவானது பிரம்மாண்டமான திறந்தவெளி மைதான நிகழ்வுகளிலிருந்து மாறுபட்டு 14,300 பேர் அமரக்கூடிய உள்அரங்கிற்குள்ளேயே முழுமையாக நடத்தப்பட்டது. இந்த முறையில் தொடக்க விழா நடத்தப்படுவது காமன்வெல்த் விளையாட்டு வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும். மற்றொரு முன்னோடி நிகழ்வாக, 74 நாடுகளைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் நிகழ்ச்சியின் இறுதியில் அணிவகுத்து வருவதற்குப் பதிலாக, தொடக்கத்திலேயே அரங்கிற்குள் அணிவகுத்து வந்தனர். இந்திய தேசியக் கொடியை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மீராபாய் சானு, லோவ்லினா போர்கோஹெய்ன் ஆகியோர் ஏந்தி வந்தனர். இந்திய வீரர்கள் அடர் நீல நிற சூட்களிலும், வீராங்கனைகள் புடவை மற்றும் பிளேசர்கள் அணிந்திருந்தனர்.