புதுடெல்லி: ‘‘கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், எங்களது அடுத்தகட்ட போராட்டம் பெரிய அளவில் இருக்கும்’’ என்று கரப்பான் பூச்சி கட்சியினர் (சிஜேபி) அறிவித்துள்ளனர். இதனால் டெல்லியில் துணை ராணுவ படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) கடந்த ஜூன் 28-ம் தேதி டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தைத் தொடங்கியது. இந்நிலையில், கடந்த 20-ம் தேதி நாடாளுமன்றம் நோக்கி சிஜேபி கட்சியினர், ஆதரவாளர்கள் பேரணி சென்றனர். அப்போது, போராட்டக்காரர்கள் - போலீஸார் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. போலீஸார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கூட்டத்தைக் கலைத்தனர். போராட்டக்காரர்களும் போலீஸார், துணை ராணுவத்தினர் மீது கல்வீசி தாக்கினர். போலீஸ் வாகனங்களைக் கவிழ்த்து சேதப்படுத்தினர். இதனால் டெல்லியில் பதற்றம் அதிகரித்தது.
இந்நிலையில், சிஜேபி செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் ரான்கா நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, கடந்த 20-ம் தேதி நடந்த போராட்டம் வெறும் முன்னோட்டம்தான் (டிரெய்லர்). அடுத்தகட்டமாக எங்களது போராட்டம் மிகப்பெரிய அளவில் இருக்கும் என்றார். இந்த பதற்றமான சூழ்நிலையில், சிஜேபியினரின் அடுத்தகட்ட போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சிஆர்பிஎப்-ஐ சேர்ந்த 20 கம்பெனி துணைராணுவபடையினர் நேற்று கொல்கத்தாவில் இருந்து விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தனர். டெல்லியின் ஜந்தர் மந்தர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.