சவுதி, செப்.17-
மெக்கா மட்டுமின்றி ஜெட்டா மற்றும் தாயிஃப் நகரங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் மற்றும் புனித பயணிகள் உடனடியாக கட்டிடங்களுக்குள் சென்று பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டனர்.
இஸ்லாத்தின் புனித நகரங்களில் மெக்காவும் மதீனாவும் இருக்கிறது. வளைகுடா நாடுகளுக்கு இடையே பதற்றம், போர் நிலவும் போதும் கூட இந்த நகரங்கள் மீது மட்டும் எப்போதும் தாக்குதல் எதுவுமே நடத்தப்படாது. இந்தச் சூழலில் தான் புனித நகரமான மெக்காவுக்கு திடீரென அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டு
ள்ளது.
எச்சரிக்கை சிஸ்டம்
தேசிய அவசரக்கால எச்சரிக்கை சிஸ்டம் என்ற அமைப்பு மூலமே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெக்கா பிராந்தியத்தில் உள்ள செல்போன்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான நெவ்வொர்க் மூலம் நேரடியாக எச்சரிக்கை சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது எளிமையாக சொல்ல வேண்டும் என்றால் பொதுமக்கள் கைகளில் இருக்கும் செல்போன்களுக்கு நேரடியாக அலர்ட் சென்றுள்ளது.
எச்சரிக்கை வெளியானதை தொடர்ந்து, மெக்காவில் வசிப்பவர்கள் மற்றும் அங்கு சென்றுள்ள புனித பயணிகள் பதற்றமடையாமல் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தினர். கட்டிடங்களுக்குள் இருப்பவர்கள் ஜன்னல்கள், பால்கனிகள் மற்றும் திறந்த பகுதிகளில் இருந்து விலகி, உட்புற அறைகளில் இருக்குமாறு கூறப்பட்டது. வெளியே இருப்பவர்கள் உடனடியாக அருகில் உள்ள கட்டிடங்களுக்குள் செல்ல வேண்டும் என்றும் அது முடியாத சூழலில் வலுவான தடுப்புகளுக்குப் பின்னால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
மெக்காவை நோக்கி செல்லும் சாலைகளில் இருந்த வாகன ஓட்டிகளுக்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன. பாலங்கள் மற்றும் உயரமான கட்டிடங்களுக்கு அருகில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என்றும் பாதுகாப்பான இடத்தில் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டு பாதுகாப்பான இடத்தில் தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது. இந்த எச்சரிக்கை மெக்கா மட்டுமின்றி ஜெட்டா மற்றும் தாயிஃப் பகுதிகளுக்கும் விடுக்கப்பட்டதால் அங்கு வசிப்பவர்களிடையேயும் பரபரப்பு ஏற்பட்டது.
புனித நகரமான மெக்காவுக்கு இதுபோன்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரம் எதற்காக இந்த அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்பது குறித்து சவுதி சிவில் பாதுகாப்புத் துறை அதிகாரப்பூர்வமாக எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை. இருப்பினும், அப்பகுதியில் சமீப நாட்களாக அதிகரித்து வரும் தாக்குதல்களுக்கு மத்தியில் இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
ஹவுதி தீவிரவாதிகள்
ஏமனில் செயல்படும் ஹவுதி அமைப்பு தீவிரவாதிகள் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் மேற்கு சவுதி அரேபியாவின் நகரங்கள் மற்றும் முக்கிய கட்டமைப்புகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இதனால் சவுதி அதிகாரிகள் நாட்டின் மேற்கு பகுதிகளில் ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்திருந்தனர். இந்தச் சூழலில் புனித நகரமான மெக்காவுக்கும் இதுபோல அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.
இதற்கிடையே, ஏமனில் ஹவுதி படைகளுக்கு எதிரான அரசு படைகளின் வான்வழித் தாக்குதல்களும் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுதியின் ஆதரவு பெற்ற ஏமன் அரசு படைகள், தாயிஸ் பகுதியை சுற்றிலும் ஹவுதிகளை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். தாயிஸ் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் ஹவுதிகள் பயன்படுத்தி வந்த பாலிஸ்டிக் ஏவுகணை ஏவுதளம் முழுமையாக தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தாயிஸின் தெற்கே உள்ள காதிர் மாவட்டத்திலும் ஹவுதிகளை குறிவைத்து வான்வழித் தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும் இந்த ஹை அலர்ட் நிலை சிறிது நேரம் மட்டுமே இருந்தது. மெக்கா, ஜெட்டா மற்றும் தாயிஃப் பகுதிகளில் நிலவிய ஆபத்து கடந்துவிட்டதாக சவுதி சிவில் பாதுகாப்புத் துறை பின்னர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. இதையடுத்து அவசர எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டது.
சவுதி வானில் அடுத்த அதிர்ச்சி! பீதியில் அஞ்சி ஓடும் பொதுமக்கள்! வளைகுடா நாட்டில் எதிர்பாராத பாதிப்பு
எச்சரிக்கை
மெக்கா மற்றும் புனிதத் தலங்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் வந்து செல்லும் நிலையில், பாதுகாப்பு தொடர்பான எச்சரிக்கைகள் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகின்றன. அவசர சூழ்நிலைகளில் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்களை நம்பாமல், சவுதி அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மட்டுமே பின்பற்றுமாறு பொதுமக்களுக்கும் பயணிகளுக்கும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.