புதுடெல்லி: உலகக் கோப்பை ஹாக்கி தொடரில் விளையாடும் இந்திய அணியின் சீருடை, நீல நிலத்திலிருந்து காவி நிறத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இது பல்வேறு சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு நடத்தும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர் வரும் ஆகஸ்ட் 15 முதல் 30 வரை பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரில் கலந்து கொள்ளும் இந்திய ஆடவர், மகளிர் அணிகளின் சீருடை பாரம்பரியமிக்க நீல நிறத்துக்கு பதிலாக முழுவதுமான காவிநிறத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் இந்திய ஹாக்கி அணியின் புதிய சீருடையை ஹாக்கி இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது. வீரர்கள் மற்றும் உதவிப் பணியாளர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்ட பிறகே இந்த ஆடை வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டுள்ளதாக ஹாக்கி இந்தியா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் விரேன் ரஸ்கின்ஹா தனது எக்ஸ் பதிவில், “இந்திய ஹாக்கி நிர்வாகம் நாட்டிற்காக பல நல்ல காரியங்களைச் செய்துள்ளது என்பதை நான் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ஆனால், தற்போது இந்த சீருடை நிற மாற்ற நடவடிக்கை உண்மையிலேயே சங்கடத்தை ஏற்படுத்துகிறது. இந்திய அணியின் பாரம்பரியமும் அடையாளமும் எப்போதும் 'நீல நிறம்' தான். பல ஆண்டுகளாக அந்த நீல நிறச் சீருடையை நான் மிகுந்த பெருமையுடன் அணிந்து விளையாடியிருக்கிறேன். ரசிகர்கள் நமது இந்திய அணியை நீல நிறத்திலேயே பார்க்க விரும்புகிறார்கள். இதில் காவி நிறத்தைக் கொண்டு வந்ததன் தர்க்கம் என்னவென்று புரியவில்லை?" எனத் தெரிவித்துள்ளார். இதே போல், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது அதிருப்தியை தெரிவித்துள்ளனர்.