சென்னை: டெண்டர்களில் ஆரோக்கியமான போட்டி இருந்தால் அரசு ஒரு ஆண்டுக்கு Rs 60000 கோடி வரை சேமிக்க முடியும் !
எஸ்டிமேட் பெரும்பாலும் கடந்த ஆட்சிகளில் அதிகப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் செட்டிங் செய்யாமல் அனைத்து தகுதியான ஒப்பந்ததாரர்களையும் பங்கெடுக்க விடும் பொழுது, அவர்கள் எஸ்டிமேட் விட 30% குறைவாக ஒப்பந்தப்புள்ளி கோரியும் அதில் அவர்களால் லாபம் பார்க்க முடிகிறது. அந்த அதிகப்படுத்தப்பட்ட எஸ்டிமேட் தான் Party Fund ஆக கடந்த ஆட்சியில் அமைச்சர்கள் அடித்த பணம் என்று அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் கூறியுள்ளார்.
இந்த நிலை தொடர டெண்டர் சட்டங்களிலும் ஊழலை ஒழிக்க மற்ற சட்டங்களிலும் பல சட்ட திருத்தங்களும் தேவை. செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்தான விரிவான புகாரையும் அறப்போர் இயக்கம் வரும் வாரத்தில் முதல்வருக்கு அனுப்ப உள்ளோம் என்றும் அறப்போர் இயக்கத்தின் ஜெயராமன் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளார்.
தமிழகத்தின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர்கள் வெளிப்படையாகவும் கடுமையான போட்டியுடனும் நடத்தப்படுவதால் அரசுக்கு சுமார் 30% வரை நிதி சேமிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல்வர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு பொறுப்பேற்ற 100 நாட்களில், 25 மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் 1,000-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் கோரப்பட்டுள்ளன. ஒப்பந்ததாரர்கள் தங்களுக்குள் கூட்டணி அமைத்துக் கொண்டு விலையை உயர்த்திய நிலை மாறி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது ஒவ்வொரு பணிக்கும் 10 முதல் 12 ஒப்பந்ததாரர்கள் வரை போட்டிபோட்டு ஏலம் கேட்கிறார்களாம்.
கரூர் கூட்டுக் குடிநீர் திட்டங்கள், நாகர்கோவில் கழிவு அகற்றுதல், மதுரை சிமெண்ட் சாலை அமைத்தல், குளித்தலை உறிஞ்சுகிணறு பணி மற்றும் மேட்டுப்பாளையம் பயோமைனிங் போன்ற பல்வேறு திட்டங்களில் இந்த விலை வீழ்ச்சியும், அரசுக்கான சேமிப்பும் அப்பட்டமாக தெரிவதாக கூறுகிறார்கள் ஒப்பந்ததாரர்கள்.. உதாரணத்திற்கு, நாகர்கோவிலில் ₹4.04 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு ₹2.89 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு 28.35% (₹1.14 கோடி) நிதி சேமிக்கப்பட்டுள்ளது. அதேபோல மதுரையில் ₹92.4 லட்சம் மதிப்பிலான சாலை பணிக்கு ₹67.5 லட்சம் மட்டுமே ஏலம் கேட்கப்பட்டு 26.90% தொகை சேமிக்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தின் மதிப்பீட்டுத் தொகையை விட 2%-க்கு மேல் செலவு அதிகரித்தால் உயர் அதிகாரிகளின் எழுத்துப்பூர்வ அனுமதி பெற வேண்டும் என்றும், தேவையற்ற பணிகளுக்காகத் திட்டங்களைப் பிரிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது..
இதனிடையே, அறப்போர் இயக்கத்தின் அமைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன் இது குறித்துக் கூறுகையில், ஒப்பந்ததாரர்கள் இவ்வளவு குறைந்த விலைக்கு ஏலம் எடுப்பது வரவேற்புக்குரியது என்றாலும், இதுவரை அதிகாரிகள் திட்டங்களுக்கான மதிப்பீட்டுத் தொகையை மிக அதிகமாக நிர்ணயம் செய்து வந்ததையே இது காட்டுகிறது என்றும், இனி வரும் காலங்களில் சரியான மதிப்பீட்டைத் தயாரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.