2020 முதல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் 2.49 கோடி ரேசன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணையமைச்சர் நிமுபன் ஜெயந்திபாய் பம்பானியா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார். அதில்,
இந்தியாவில் தற்போது சுமார் 20 கோடி ரேசன் கார்டுகள் புழக்கத்தில் இருக்கிறது. தற்போது, தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ், ரேசன் கடைகள் மூலம் சுமார் 80 கோடி மக்களுக்கு மத்திய அரசு இலவச உணவு தானியங்களை வழங்கி வருகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் இன்னும் 0.79 கோடி பயனாளிகள் அடையாளம் காணப்படவில்லை. டிஜிட்டல் மயமாக்கல் முயற்சிகளின் விளைவாக, 2020 மற்றும் 2025-க்கு இடையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தோராயமாக 2.49 கோடி ரேசன் கார்டுகளை அகற்ற முடிந்துள்ளது.
போலி கார்டுகள், தகுதியற்ற பயனாளிகள், இ- கே.ஒய்.சி. முரண்பாடுகள், பயனாளிகளின் இறப்பு மற்றும் நிரந்தர இடம்பெயர்வு ஆகிய காரணங்களின் அடிப்படையில் அவை நீக்கப்பட்டுள்ளன. ரேஷன் கார்டுகளை தவறாக ரத்து செய்ததாக பயனாளிகளிடம் இருந்து அரசாங்கத்திற்கு எந்த குறிப்பிட்ட புகார்களும் வரவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.