ஆளுநர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி வைத்த கோரிக்கையை ஏற்று நாடு முழுவதும் உள்ள ஆளுநர் மாணிகைகளின் ராஜ் பவன் என்ற பெயர் லோக் பவன் என்று மாற்றப்பட்டது. ஆளுநர்கள் ராஜாக்கள் அல்ல என்பதாலும் ஆளுநர் மாளிகை மக்களுக்கான தளம் என்பதாலும் லோக் (மக்கள்) பவன் என பெயர் மாற்றம் பெற்றுள்ளது.

இந்த சூழலில் டெல்லியில் பிரதமர் அலுவலகம் செயல்பட உள்ள புதிய கட்டிட வளாகத்திற்கு சேவா தீர்த் என்று பெயரிடப்பட உள்ளது. சேவா தீர்த் என்பது புனிதமான சேவைத்தலம் என்று பொருள்படும்.

கட்டுமானப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த வளாகத்தில், பிரதமர் அலுவலகத்துடன் அமைச்சரவை செயலகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம் ஆகியவை செயல்படும். உலகத் தலைவர்களுடனான உயர் மட்ட சந்திப்புகளுக்கான இந்தியா ஹவுஸ் கூட இதில் ஒரு பகுதியாக இருக்கும்.

பிரதமர் மோடியின் பா.ஜ.க. அரசு ஆட்சிக்கு வந்த பிறகு, பிரதமரின் இல்லம் அமைந்துள்ள ரேஸ்கோர்ஸ் சாலை லோக் கல்யாண் மார்க் என்றும், வரலாற்று சிறப்புமிக்க ராஜ பாதையை கர்தவ்ய பாதை என்றும், மத்திய செயலகம் கர்தவ்ய பவன் என்றும் பெயர் மாற்றப்பட்டது.