சென்னை, செப். 19-
விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என தவெகவினர் ஒரு புறம் கூறி வரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை பிரதமராக ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த பிரவீன் சக்கரவர்த்தி, கூட்டணி பற்றி பேச அவர் யார்? என்றார். இதற்கு பதில் அடி கொடுத்துள்ள செல்வப்பெருந்தகை, ‘இது அவரது மேட்டுக்குடி மனநிலை’ என விமர்சித்துள்ளது மீண்டும் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதை வெட்ட வெளிச்சம் ஆக்கியுள்ளது.
விஜய் தான் பிரதமர் வேட்பாளர் என்று தவெகவினர் கூற, ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என காங்கிரசினர் கூற தவெக காங்கிரஸ் கூட்டணிக்குள் கடந்த சில நாட்களாக சலசலப்பு ஏற்பட்டு இருந்தது. ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக தவெக ஏற்காவிட்டால் அமைச்சர் பதவியில் இருந்து விலக தயார் என ராஜேஷ்குமாரும் கூறியிருந்தார். இதனை தொடர்ந்து விஜய்யை நேரில் சந்தித்து இந்த மோதலுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் முற்றுப்புள்ளி வைத்து இருந்தார்.
எதற்கு கூட்டணி
இந்த நிலையில் இன்று காலையில் பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எதற்கு கூட்டணி?.. ராகுல் காந்தி தான் பிரதமர் என்று சபதம் ஏற்போம். அவரை பிரதமராக நேர்மையாக ஒப்புக் கொள்பவர்களுடன் கூட்டணி அமைப்பதுதான் நேர்மை” என கூறினார். இதற்கு பதில் அளித்த காங்கிரஸ் எம்.பி பிரவீன் சக்கரவர்த்தி “அவரு யாருங்க இப்போ?.. எதுக்கு தேவையில்லாம வேஸ்ட்டா.. முன்னாள்.. கடந்த காலத்துல என்ன வேணா இருந்திருக்கலாம். இப்போ அதெல்லாம் அவசியமே கிடையாது.. கூட்டணியில் எந்தக் குழப்பமும் இல்லை” என்றார்.
பிரவீன் சக்கரவர்த்தி பேச்சுக்கு தற்போது செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:- கூட்டணி பற்றி பேச செல்வப்பெருந்தகை யார் எனக் கேட்கிறார் அறிவு ஜீவி என்று கூறிக்கொள்ளும் ஒருவர். வடமாநிலத்தில் எங்கள் தலைவர் சென்ற பின் அவர் இருந்த மேடையை தண்ணீர் உற்றி கழுவிய அழுக்கேறிய மதவாத மேட்டுக்குடி மனநிலையின் நீட்சியே இது. மாண்புமிகு நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காத எவரோடும் கூட்டணி எதற்கு என்பதே என் கேள்வி?
அதற்கு நீண்ட நேரம் முதல்வர் சிரித்துப் பேசினார் என்கிறார் அந்த அறிவு ஜீவி. உங்களுடன் நீண்ட நேரம் சிரித்து பேசுவதுதான் கூட்டணியில் தொடருவதற்கான ஒப்பந்தமா? சரி முதல்வராவது ஒரே ஒரு முறை ராகுல்காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லிவிட்டால் போதுமே. பிரச்சினை தீர்ந்ததே.
முதல்வர் கூட சொல்ல வேண்டாம் அந்தக் கட்சியில் உள்ள முன்னனிப் பொறுப்பில் உள்ளோர் யாராவது சொல்லட்டுமே, அது கூட வேண்டாம், நீண்ட நேரம் உங்களிடம் சிரித்துப் பேசிய முதல்வரிடம் நம் அணியின் பிரதமர் வேட்பாளர் எங்கள் தலைவர் ராகுல் காந்திதான் என்று நீங்கள் அழுத்தமாகச் சொல்லி அதை அவரும் ஏற்றுக்கொண்டு உங்களிடமாவது உத்தரவாதம் தந்தாரா? தந்திருந்தால் அதையாவது சொல்லுங்களேன்.
பிரதமர் மோடி குறித்தோ, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்தோ, பாஜக குறித்தோ சட்டப்பேரவையில் விமர்சித்தால் அது சட்டப்பேரவைக் குறிப்பில் இருந்து வேகமாக நீக்கப்படுகிறதே அது ஏன் என்று அடுத்த முறை சிரித்துப் பேசும் போது முதல்வரிடம் கேட்டுச் சொல்லுங்கள். உழைக்காமல் கிடைத்த பதவியை அனுபவிப்பது எளிது; உழைத்து இயக்கத்தை வளர்ப்பதுதான் கடினம். பதவியின் உயரம் ஒருவரின் அரசியல் உயரத்தைத் தீர்மானிப்பதில்லை; அவர் இயக்கத்திற்காகச் செய்த உழைப்பும் அர்ப்பணிப்புமே அதைத் தீர்மானிக்கும்.
காலம் பலரை முன்னிறுத்தும்; அதே காலம் பலரை மறந்தும் போகும். ஆனால் ஒரு பேரியக்கத்திற்காக நேர்மையாக உழைத்தவர்களின் பங்களிப்பை வரலாறு பதிவு செய்யும். காங்கிரஸ் பேரியக்கம் தனிநபர்களைவிடப் பெரியது. பதவிகளைவிட அதன் கொள்கை பெரியது.
தற்போதைய தமிழ்நாட்டின் முதல்வர் தான் பிரதமர் வேட்பாளர் என்போர் பக்கம் நின்று கொண்டு என் தலைவர் திரு ராகுல் காந்தி தான் பிரதமர் எனச் சொல்லும் என் மீது கல்லெறிபவர் என்னை யார் என்று கேட்கிறார். உரக்கச் சொல்கிறேன். நான் திரு. ராகுல் காந்தி பிரதமராக வேண்டும் என விரும்பும் காங்கிரஸ் தொண்டன். சுயமரியாதையுடன் இந்த மண்ணின் மைந்தன், பூர்வகுடி” என்று கூறி
யுள்ளார்.