டெல்லி: கடல்மட்டம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமாக அதிகரித்து வருவதால், இந்தியாவின் கொல்கத்தா மற்றும் மும்பை, வங்கதேசத்தின் தாகா உள்ளிட்ட தெற்காசியாவின் தாழ்வான டெல்டா பகுதிகளில் 1 கோடியே 40 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்கள் வீடுகளை நிரந்தரமாக இழக்கும் அபாயத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை எச்சரித்துள்ளது.
மனித நடவடிக்கைகளால் ஏற்படும் புவி வெப்பமயமாதலால் பனிப்பாறைகள் உருகுவதும், கடல் நீர் வெப்பமடைந்து விரிவடைவதும் இந்த உயர்வுக்குக் காரணமாகும். 2024 ஆம் ஆண்டில் மட்டும் உலகளாவிய கடல்மட்டம் 5.9 மி.மீ உயர்ந்து சாதனை படைத்துள்ளது.
உலக மக்கள் தொகையில் சுமார் 10 சதவீதத்தினர் (770 மில்லியன் மக்கள்) கடலோரப் பகுதிகளில் வசித்து வருவதால் கடுமையான ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர் என்றும், நாடுகளும் அரசுகளும் உடனடியாக ஒருங்கிணைந்த தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.